கஜா: நிவாரண முகாமில் மக்களுக்கு தயார் செய்த உணவை உண்டு ஆய்வு செய்த முதல்வர்
கஜா: நிவாரண முகாமில் மக்களுக்கு தயார் செய்த உணவை உண்டு ஆய்வு செய்த முதல்வர்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ரயில் மூலம் சென்று மக்களை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார். மேலும் அவர்களுக்கு வழங்கப்படும் மருந்து மற்றும் உணவுகள் குறித்தும் ஆய்வுகள் நடத்தினார்.
புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டினத்தை முதல்வர் ரயில் மூலம் சென்று பார்வையிடும் திட்டம் வகுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு முதல்வர் சென்னையிலிருந்து ரயிலில் புறப்பட்டு இன்று காலை நாகை சென்றடைந்தார்.
நாகை மற்றும் திருவாரூர் ஆகிய இரு மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட மக்களை இன்று காலை, முதல்வர் பழனிசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். முதலில் நாகையில் உள்ள பஞ்சாய்த்து அலுவலகத்தில் வைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். மேலும் நிவாரணப் பணியின் போது உயரிழந்த மின்ஊழியரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணிநியமன ஆணையும் வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில், தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் மருந்துகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார். மக்களுக்கு தயாரிக்கப்பட்ட உணவு தரமானதாக உள்ளதா என ஆய்வு செய்வதர்காக முதல்வர் முகாமில் சமைக்கப்பட்ட உணவை வாங்கி உண்டார்.
பின்னர் நாகப்பட்டினம் மாவட்டம் பிரதாபராமபுரம், விழுந்தமாவாடி, புஷ்பவனம் மற்றும் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதிகளை பார்வையிட்டு, மக்களை சந்தித்து ஆறுதல் கூறி பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் அரசு உரிய நிவாரண உதவிகளை வழங்கும் என்று உறுதி அளித்தார்.