
எருது விடும் விழாவில் பரிதாபம்... மாடுமுட்டி வேடிக்கை பார்த்தவர் துடிதுடிக்க மரணம்.!
எருது விடும் விழாவில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவரை, மாடு முட்டியதில் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழையபேட்டை நேதாஜி சாலையில் நேற்று எருதுவிடும் விழா நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக கிருஷ்ணகிரி, வேலூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாடுகளுடன் உரிமையாளர்கள் வந்துள்ளனர்.
தொடர்ந்து வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளையும் விடப்பட்ட நிலையில், 400-க்கும் மேற்பட்ட காளைகள் அதில் பங்கேற்று ஓடின. இதனை பார்ப்பதற்காக கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு வந்துள்ளனர்.
இந்த நிலையில், எருது விடும் விழாவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த, திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த மடவாளம் பகுதியில் வசித்து வந்த ராஜேஷ் என்பவரை மாடு முட்டி தனது கொம்பால் தூக்கி வீசியுள்ளது.
இதனால் படுகாயமடைந்த ராஜேஷை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அத்துடன் எருதுவிடும் விழாவில் மாடு முட்டியதில் கிட்டத்தட்ட 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன் காரணமாக அங்கு ஏதும் அசம்பாவிதம் நடக்கக்கூடாது என கிருஷ்ணகிரி டவுன் காவல்துறையினர் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
Advertisement
Advertisement