இறந்தவர் உடலை கழுத்தளவு தண்ணீரில் தூக்கி செல்லும் பரிதாபம்.! என்ன காரணம்.? கோரிக்கை வைக்கும் பொதுமக்கள்.!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்துள்ள கறம்பக்குடி அருகே உள்ள மயிலாடி தெருவை சேர்ந்த குழந்தையன் என்பவரின் மனைவி சிந்தாமணி என்பவர் நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். இதனையடுத்து அவரது உறவினர்கள் சிந்தாமணியின் உடலை மயானத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால் அப்பகுதியினர் மயானத்திற்கு செல்ல முறையான பாதை வசதி இல்லாததால் பல வருடங்களாக மயானத்திற்கு செல்ல விவசாய நிலங்கள் மற்றும் குளத்தில் இறங்கி தான் இறந்தவர்களின் உடலை எடுத்து சென்று வருகின்றனர். இந்தநிலையில் அப்பகுதியில் சமீபத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக மயானத்திற்கு செல்லும் வழியில் உள்ள குளத்தில் தண்ணீர் நிரம்பி இருந்தது.
இதையடுத்து அவரது உடலை குளத்தின் வழியாக கழுத்தளவு தண்ணீரில் தூக்கி சென்று உறவினர்கள் தகனம் செய்தனர். இந்தநிலையில், சடலத்தை குளத்தின் வழியாக கழுத்தளவு தண்ணீரில் தூக்கி சென்ற புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு மயானத்திற்கு செல்ல பாதை வசதி செய்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.