காதல் திருமணம் செய்த மகன்.. அதிர்ச்சியில் உயிரை மாய்த்த பெற்றோர்..!
கிருஷ்ணகிரி மாவட்டம் பெருபோனபள்ளி கிராமத்தில் வசித்து வருபவர்கள் சரவணன் - கீதா தம்பதியினர். இவர்களுக்கு ரஞ்சித் குமார் என்று மகன் ஒருவர் உள்ளார். இவர் தனது எதிர் வீட்டில் வசிக்கும் தீபிகா என்ற பெண்ணுடன் நட்பாக பழகி வந்துள்ளார்.
இந்த நட்பானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்த காதல் விவகாரத்தை அறிந்த ரஞ்சித் குமாரின் பெற்றோர் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் அடிக்கடி பெற்றோருக்கும் மகனுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இதனையடுத்து பெற்றோரை தன்னால் சமாதானப்படுத்த முடியாது என்று நினைத்த ரஞ்சித் குமார் வீட்டுக்கு தெரியாமல் தீபிகாவை திருமணம் செய்துள்ளார்.

இதனை சற்றும் எதிர்பாராத ரஞ்சித் குமாரின் பெற்றோர் தங்களது பேச்சை மீறி மகன் காதல் திருமணம் செய்து கொண்டதை ஏற்றுக் கொள்ள முடியாமல் பூச்சி மருந்து குடித்து இருவரும் தற்கொலை செய்து கொண்டனர். இதனையடுத்து தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.