3 வாரங்களுக்கு முன்பு காணாமல் போன சிறுமி அழுகிய நிலையில் சடலமாக மீட்பு: தலைமறைவான தந்தைக்கு வலைவீச்சு..!

3 வாரங்களுக்கு முன்பு காணாமல் போன சிறுமி அழுகிய நிலையில் சடலமாக மீட்பு: தலைமறைவான தந்தைக்கு வலைவீச்சு..!



the-girl-who-went-missing-3-weeks-ago-was-recovered-as

மதுரை மாவட்டம், ஜெய்ஹிந்த்புரம் அருகேயுள்ள சோலைஅழகுபுரம் வ.உ.சி தெருவைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவர் தையல் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பிரியதர்ஷினி. இந்த தம்பதியினரின் மகள் கனிஷ்கா (9). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 2 ஆம் தேதி காளிமுத்துவும், மகள் கனிஷ்காவும் திடீரென மாயமாகியுள்ளனர். இதனால் இருவரையும் பிரியதர்ஷினி தேடியுள்ளார். இருவர் குறித்த தகவல் எதுவும் கிடைக்காததால் ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், வீட்டின் பரணிலிருந்து நேற்றிரவு துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த பிரியதர்ஷினி பரணில் ஏறி பார்த்தபோது அங்கு துணிமூட்டை ஒன்றில் இருந்து துர்நாற்றம் வருவது தெரிய வந்தது. அந்த மூட்டையைப் பிரித்து பார்த்தபோது மூட்டைக்குள் இருந்த வாளிக்குள் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுமி கனிஷ்காவின் சடலம் அழுகிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்திற்கு பிரியதர்ஷினி தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்தூறையினரின் முதற்கட்ட விசாரணையில் காளிமுத்து அடிக்கடி சந்தேகம் அடைந்து பிரியதர்ஷினியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சிறுமியை அவரே கொலை செய்து விட்டு தப்பிச் சென்றாரா? என்ற சந்தேகத் தின்பேரில் காளிமுத்துவை காவல்துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.