அஜித் கார் ரேஸ்… விஜய் வருகை! சில்வர்ஸ்டோனில் நடக்கப்போவது என்ன?
ஒரே பயணத்தில் ஒட்டுமொத்தமாக அள்ளும் 8,400 கோடி.....! முதல்வர் விஜய்யின் மாஸ்டர் பிளானில் புதிய வேலை வாய்ப்புகள்...!!!
தமிழ்நாட்டை ஆசியாவின் முன்னணி முதலீட்டு மையமாக மாற்றும் நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, முதலமைச்சர் விஜய் தலைமையிலான உயர்மட்டக் குழு இங்கிலாந்து சென்றுள்ளது. முதலீடுகளை ஈர்ப்பது மட்டுமின்றி, மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையிலும் புதிய வாய்ப்புகளை உருவாக்குவது இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது.
தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை அதிகரிக்கும் வகையில் நடத்தப்பட்ட ‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026’ மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதில் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் மட்டும் சுமார் ₹8,491 கோடி முதலீடு செய்ய முன்வந்துள்ளன. இதன் மூலம் 5,690 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அதிஷ்டகார பாட்டி... முதல்வர் விஜய் அளித்த அன்பு பரிசு! சின்னக்காவூர் திடீர் விசிட்டில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்...!!!
பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தம் தரும் புதிய வாய்ப்புகள்
இந்தியா-பிரிட்டன் விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (CETA) கடந்த ஜூலை 15-ம் தேதி நடைமுறைக்கு வந்தது. ஒப்பந்தம் அமலுக்கு வந்த முதல் நாளிலேயே சென்னையில் இருந்து ஏற்றுமதிப் பொருட்களை அனுப்பி வைத்து தமிழ்நாடு முக்கிய பங்காற்றியது.
இதன் மூலம் ஜவுளி, தோல் பொருட்கள், வாகன உதிரிபாகங்கள், பொறியியல் பொருட்கள், மின்னணுவியல் உள்ளிட்ட துறைகளில் பிரிட்டன் சந்தையை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. ஏற்கெனவே பிரிட்டன் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் பொறியியல், நிதிச் சேவைகள் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் செயல்பட்டு வரும் நிலையில், அவற்றின் முதலீடுகளை மேலும் விரிவுபடுத்த அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
EV, மின்னணுவியல் துறைகளில் முதலீடு ஈர்க்க திட்டம்
முதலமைச்சர் விஜயின் இங்கிலாந்து பயணத்தில் மேம்பட்ட உற்பத்தி, மின்சார வாகனங்கள் (EV), மின்னணுவியல் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் (GCC) போன்ற வளர்ந்து வரும் துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் மாநிலத்தில் உயர்தர வேலைவாய்ப்புகள் உருவாகும் என அரசு எதிர்பார்க்கிறது.
அதேபோல், தமிழ்நாட்டின் வலுவான வாகன உற்பத்திச் சூழலை அடிப்படையாகக் கொண்டு மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கும் திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் ஏற்கெனவே இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டை பார்வையிடும் குழு
இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் வகையில், உலகப் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டை நேரில் பார்வையிட உயர்மட்டக் குழு திட்டமிட்டுள்ளது. அங்கு பந்தயப் பாதை வடிவமைப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள், வர்த்தக நடைமுறைகள், விளையாட்டுச் சுற்றுலா மற்றும் சிறப்பு வாகனத் தொழில்கள் தொடர்பான செயல்பாடுகளை குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர்.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான குழு செப்டம்பர் 10-ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு, செப்டம்பர் 17-ம் தேதி சென்னை திரும்புகிறது. பொதுப்பணிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, Guidance நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான தீபக் ஜேக்கப் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் இந்தப் பயணத்தில் இடம்பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க: மேகங்கள் திரளும்… மழையும் பெய்யும்! 9 மாவட்டங்களுக்கு இன்று மழை எச்சரிக்கை!