போதைக்காகவும், கள் நிறத்திற்காகவும் மாத்திரையை கலந்து கள் விற்பனை! ஒன்று கூடி வாங்கி குடித்த இளைஞர்கள்! போலீசாரின் அதிரடி நடவடிக்கை!
போதைக்காகவும், கள் நிறத்திற்காகவும் மாத்திரையை கலந்து கள் விற்பனை! ஒன்று கூடி வாங்கி குடித்த இளைஞர்கள்! போலீசாரின் அதிரடி நடவடிக்கை!
தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கள் இறக்கி விற்பனை செய்யப்படுவதாக தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் தனிப்படை போலீசாருக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் தஞ்சை மாரியம்மன்கோவில், கீழவஸ்தாசாவடி, வயலூர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வயலூரை அடுத்த ராஜேந்திரம்தோப்பு பகுதியில் கள் விற்பனை செய்தது தெரியவந்தது. அங்கு ஏராளமான இளைஞர்களும் அடிக்கடி வந்து செல்வதாகவும் தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
போலீசார் அங்கு சென்று பார்த்தபோது குடம் குடமாக கள் இறக்கி விற்பனை நடந்து கொண்டு இருந்தது தெரியவந்தது. போலீசார் வருவதை அறிந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அங்கிருந்த பல கள் குடங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் போதைக்காகவும், கள் நிறத்திற்காகவும் மாத்திரையை கலந்து விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து செவத்தியார், துரைராஜ், காமராஜ் ஆகிய 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.