நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் இது நிச்சயமாக இலவசம்.! வாக்குறுதி கொடுத்த சீமான்.!
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் இது நிச்சயமாக இலவசம்.! வாக்குறுதி கொடுத்த சீமான்.!
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளநிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் இப்போது நாம் தமிழர் கட்சி வளர்ந்து வரும் கட்சியாக உருவெடுத்து வருகிறது. சீமானும் பல இடங்களில் பிரச்சாரத்தை நடத்தி வருகிறார். வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும், 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடப்போவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருந்தார்.
இந்நிலையில், சென்னையில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில், நேற்று வீரமங்கை வேலுநாச்சியாரின் 224-ம் ஆண்டு நினைவு நாள் மற்றும் எழுத்தாளர் தொ.பரமசிவன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், நடிகர்கள் அரசியலுக்கு வர வேண்டாம் என்று நான் சொல்லவில்லை, ஒரு நடிகர் நடிப்பதால் மட்டுமே அரசியலுக்கு வந்துவிடலாம் என்ற தகுதி இருப்பதை நாங்கள் ஏற்கவில்லை என தெரிவித்தார்.
ஆரம்ப காலத்தில் இருந்தே தம்பி விஜய் மீது எனக்கு பேரன்பு உண்டு. நடிகர் சூர்யா பொது பிரச்சினைக்காக துணிந்து பேசுகிறார். குறைந்தபட்சம் சூர்யா அளவுக்காகவாவது குரல் கொடுத்திருக்க வேண்டும். பொது மக்களுக்காக போராடி விட்டு, அவர்களின் நன்மதிப்பை பெற்று அரசியலுக்கு வாருங்கள். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் இலவசம் என்ற வார்த்தைக்கு இடம் இருக்காது. கல்வி, மருத்துவம், தரமான குடிநீர் இலவசமாக தரப்படும் என்று கூறியுள்ளார்.