போலியான பண வரவு மெசேஜை வைத்து பெண்ணிடம் ரூ.2 இலட்சம் மோசடி.. மக்களே உஷார்.!
போலியான பண வரவு மெசேஜை வைத்து பெண்ணிடம் ரூ.2 இலட்சம் மோசடி.. மக்களே உஷார்.!

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் முகாம், முல்லை நகரில் வசித்து வருபவர் ஜெயந்தி (வயது 38). இவரின் செல்போன் நம்பருக்கு கடந்த நவம்பர் மாதத்தில் அறிமுகம் இல்லாத நபரின் வாட்சப் எண்ணில் இருந்து தகவல் வந்துள்ளது. அந்த தகவலில் வீட்டில் இருந்தே பணம் சம்பாதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை உண்மை என நம்பிய ஜெயந்தி, வாட்சப் எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலமாக வேலை தொடர்பான தகவலை கேட்கவே, டெலகிராம் குழுவில் அவரின் நம்பரை இணைத்து லிங்கை கொடுத்துள்ளனர். அந்த லிங்க் மூலமாக ஒரு இணையத்திற்குள் சென்ற ஜெயந்தி பாஸ்வேர்ட் உருவாக்கிய நிலையில், அதற்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஜெயந்தியும் இணையவழியில் பணம் செலுத்திய நிலையில், அவரின் வங்கிக்கணக்குக்கு இரண்டு மடங்கு தொகை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று போலியான குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வங்கி செயலியில் பண வரவை உறுதி செய்யாத ஜெயந்தி, கூடுதல் தொகை கிடைக்கும் என மொத்தமாக ரூ.2,63,820 பணம் செலுத்தியுள்ளார்.
இந்த பணம் செலுத்தியதும் மீண்டும் பணம் தொடர்பான குறுஞ்செய்தி வரத்தால், சந்தேகமடைந்த ஜெயந்தி வங்கிக்கணக்கை சோதனை செய்த போது மோசடி நடந்து அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து, ஜெயந்தி இராமநாதபுரம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.