வங்கக் கடலில் புயல் சின்னம்:தமிழகத்திற்கு கன மழைக்கு வாய்ப்பு!
சென்னை: வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக பலமான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போதும் ஒரு புயல் வங்கக் கடலில் உருவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. இதை பற்றி சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்ததாவது:

"வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலை பெற்றிருக்கிறது. தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் இந்திய கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

மேலும் இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்றும், தமிழக தென்கிழக்கு வங்கக்கடல் - மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என்றும் அறிவித்துள்ளது. இந்த புயல் கரையை கடக்கும் போது 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்றும் கூறியுள்ளது.

இதன் பின்னர், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஆந்திரா, வடக்கு தமிழகம் நோக்கி நகர வாய்ப்புள்ளது. இதனால் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் கனமழை முதல் அதிக கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
இவ்வாறு இன்னொரு வலுவான புயல் வரப்போவதாக சென்னை வானிலை மையமும், இந்திய வானிலை ஆய்வு மையமும் சேர்ந்து எச்சரித்து இருப்பதால், தமிழக மக்கள் அதனை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர்.