சப்-இன்ஸ்பெக்டரை துப்பாக்கியால் சுட்டு தப்பிக்க முயன்ற பிரபல ரவுடி சிடி மணி கைது.!
சப்-இன்ஸ்பெக்டரை துப்பாக்கியால் சுட்டு தப்பிக்க முயன்ற பிரபல ரவுடி சிடி மணி கைது.!
சென்னை நகரின் பிரபல ரவுடிகளில் ஒருவனான சிடி மணி மீது 30க்கும் மேற்பட்ட கொலை, கொலை முயற்சி, ஆட்கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில், சென்னை புறநகர் பகுதியில் பதுங்கியிருந்த சிடி மணியை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் சுற்றி வளைத்தபோது, அந்த ரவுடி திடீரென போலீஸ் அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது குண்டு பாய்ந்து படுகாயமடைந்தார்.
இதனையடுத்து போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயன்றபோது போரூர் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்துள்ளார் சிடி மணி. இதில் அவரது கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து சிடி மணியை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதனையடுத்து காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், ரவுடி சிடி மணி இருவரும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிடி மணியிடம் இருந்து சொகுசு கார் மற்றும் துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் மீது, வளசரவாக்கம் போலீசார், கொலை முயற்சி மற்றும் சட்ட விரோதமாக ஆயுதத்தை பயன்படுத்துதல் என, இரண்டு பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில், சிடி மணியை நீதிபதி முன் ஆஜர்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், பூந்தமல்லி குற்றவியல் நீதிபதி, மருத்துவமனைக்கு சென்று சிடி மணியிடம் விசாரித்தார். பின், அவரை, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். சிகிச்சைக்கு பின் சிடி மணி சிறையில் அடைக்கப்படுவார் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.