'போலி கைடுகள் ஜாக்கிரதை': மலை கோவில்களுக்கு அதிகம் செல்பவரா நீங்கள்!,. அப்போ இது உங்களுக்குதான்..!

'போலி கைடுகள் ஜாக்கிரதை': மலை கோவில்களுக்கு அதிகம் செல்பவரா நீங்கள்!,. அப்போ இது உங்களுக்குதான்..!



many-fake-guides-are-roaming-around-palani-town-targeti

திண்டுக்கல் மாவட்டம், பழநி மலைக் கோயிலுக்கு வருவோரை குறிவைத்து 'போலி' கைடுகள் பலர் பழனி நகருக்குள் சுற்றி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வெளியூர்களில் இருந்து பேருந்து நிலையத்திற்கு வந்திறங்கும் நபர்களை போலி கைடுகள் எளிதில் அடையாளம் கண்டு பணம் பறிக்க முயற்சி செய்கின்றனர்.

மலைக் கோயிலுக்கு செல்ல வழிகேட்கும் பக்தர்களை அழைத்துச் செல்வதாக கூறி அவர்களிடம் பணம் பறிக்கின்றனர். தேவர் சிலை அருகே, சன்னதி வீதியில் இதற்கு மேல் செருப்புகளை அணிந்து செல்லக்கூடாது என்று கூறுவதோடு, அங்குள்ள கடைகளுக்கு அழைத்துச் சென்று அதிக விலை கூறி பொருட்களை பயணிகளிடம் விற்பனை முயற்சி செய்கின்றனர்.

மேலும் சிலர், தனியார் கடைகளை தேவஸ்தான கடைகள் என்று ஏமாற்றுவது அடிக்கடி நடந்து வருகிறது. இது போன்று ஏமாற்றும் நபர்கள் பேருந்து நிலையங்கள், தேவர் சிலை, சன்னதி வீதி, பூங்கா ரோடு, பாத விநாயகர் கோயில் மற்றும் வின்ச் ஸ்டேஷன் உள்ளிட்ட  இடங்களில் பக்தர்களிடம் பணம் பறிக்க காத்து கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பக்தர்களை ஏமாற்றிய மருத்துவ நகர் பகுதியை சேர்ந்த  பார்த்திபன் (42) என்பவரை காவல்துரையினர் கைது செய்தனர். இது குறித்து கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், "பழனி கோவிலில் தற்போது நடைமுறைகள் சரியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. கோவிலின் சார்பில் கைடுகள், ஏஜென்ட்டுகள் யாரும் நியமிக்கப்படவில்லை. இவர்களிடம் சிக்கி ஏமாற வேண்டாம்" என்று கூறியுள்ளார்.

நரிக்கல்பட்டி பகுதியை சேர்ந்த  பக்தர் சிவா கூறுகையில், "மலைக்கோயில் செல்லும் போது செருப்பு அணியக்கூடாது என்று கூறி கடைகளுக்குள் அழைத்துச் செல்கின்றனர். அங்கு பொருட்களின் விலையை அதிகமாக கூறி விற்பனை செய்கின்றனர்" என்று கூறினார்.