மனைவியின் தங்கை மீது தீராத ஆசை.. அடம் பிடித்த மருமகன்... பரிதாபமானநிலையில் மாமனார், மாமியார்!
மனைவியின் தங்கை மீது தீராத ஆசை.. அடம் பிடித்த மருமகன்... பரிதாபமானநிலையில் மாமனார், மாமியார்!
மனைவியின் தங்கையை திருமணம் செய்துவைக்கக்கோரி, மாமனார், மாமியாரை இளைஞர் கம்பியால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வாகராயம்பாளையத்தை சேர்ந்தவர்கள் கருப்புசாமி - சம்பூரணம் தம்பதி. இவர்களது மூத்த மகளான ராஜேஸ்வரியை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஊத்துக்குளி மேற்கு பள்ளபாளையத்தை சேர்ந்த பிரபு என்பவருக்கு திருமணம் செய்துவைத்துள்ளனர்.
இந்நிலையில் பிரபு - ராஜேஸ்வரிக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இதனிடையே தனது திருமணம் முடிந்த சில நாட்களில் இருந்தே தனது மனைவியின் சகோதரி மீது ஆசைப்பட தொடங்கியுள்ளார் பிரபு. மேலும் தனது ஆசையை வெளிப்படையாகவே தனது மனைவி மற்றும் மாணவியின் குடும்பத்தினரிடமும் கூறியுள்ளார்.
இதற்கு அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, பிரபு தனது மனைவியை அடித்து கொடுமை படுத்த தொடங்கியுள்ளார். இதனால் ஒருகட்டத்தில் ராஜேஸ்வரி தனது குழந்தையுடன் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் மகளின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என நினைத்து, வருத்தப்பட்ட ராஜேஸ்வரியின் பெற்றோர், பிரபுவுக்கு போன் செய்து சமாதானம் பேசுவதற்காக அவினாசி அருகே உள்ள துலுக்கமுத்தூர் பிரிவு அருகே வருமாறு கூறியுள்ளனர்.
அதன்படி பிரபுவும் அங்கு வர, மருமகனிடம் கருப்பசாமியும், சம்பூரணமும் சமாதானம் பேசியுள்ளனர். ஆனால் மீண்டும் ராஜேஸ்வரியின் தங்கச்சி கதையை ஆரம்பித்துள்ளார் பிரபு. இதனால் ஒருகட்டத்தில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அருகில் கிடந்த கம்பி ஒன்றை எடுத்து, வயதானவர்கள் என்றும் பார்க்காமல், தனது மாமனார், மாமியார் இருவரையும் கம்பியால் தாக்கியுள்ளார் பிரபு. இதில் அவர்களுக்குக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அருகில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ராஜேஸ்வரியின் வீட்டார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து, வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் பிரபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மனைவியின் தங்கை மீது ஆசைப்பட்டு, இளைஞர் செய்த காரியம் அந்த பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.