ரூ. 2.75 லட்சத்துக்கு காஸ்ட்லீ பைக் வாங்கிய இளைஞர்.. வாங்கிய சில நாட்களில் காத்திருந்த அதிர்ச்சி.. கதறும் பெற்றோர்..



Man killed his friend to settle his lent

தான் வாங்கிய கடனை அடைப்பதற்காக இளைஞர் ஒருவர் நண்பனை கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த வடக்கிப்பாளையம் என்ற  ஊரைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துவரும் புருஷோத்தமன் சமீபத்தில் தனது நீண்ட கால ஆசையான ஹோண்டா பென்லி ரக பைக் ஒன்றை ரூ. 2.75 லட்சத்துக்கு வாங்கியுள்ளார்.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது நண்பர்களை பார்த்துவிட்டு வருவதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு தனது புது பைக்கை எடுத்துக்கொண்டு நண்பர்களை பார்க்க சென்றுள்ளார் புருஷோத்தமன். ஆனால் நீண்ட நேரமாகியும் புருஷோத்தமன் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் அவரை பற்றி எந்த தகவலும் இல்லை.

இதனால் பதறிப்போன பெற்றோர் தங்கள் மகனை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரை அடுத்து போலீசார் புருஷோத்தமனை தேட தொடங்கினர். ஆனால் அவர்களுக்கும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில்தான் புருஷோத்தமனின் புது பைக் கார்த்திக் என்பவரின் கோழிப்பண்ணையில் நிற்பது போலீசாருக்கு தெரியவந்தது.

உடனே கார்த்திகை அழைத்து போலீசார் விசாரித்தபோது, தான் வாங்கிய கடனை திருப்பி தரும்வரை இந்த பைக் இங்கையே நிற்கட்டும் என புருஷோத்தமனின் நண்பர் உதயகுமார் இந்த பைக்கை இங்கே விட்டுசென்றதாக கார்த்திக் போலீசாரிடம் கூறியுள்ளார்.

உடனே உதயகுமாரை அழைத்து போலீசார் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. தான் வாங்கிய புது பைக்கை எடுத்துக்கொண்டு தனது நண்பன் உதயகுமாரை சந்திக்க சென்ற புருஷோத்தமன், அவரை பைக்கில் ஏற்றிக்கொண்டு இருவரும் காண்டூர் கால்வாய் அருகே சென்று பேசிக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது உதயகுமார் தனது நண்பன் புருஷோத்தமனை கால்வாயில் தள்ளிவிட்டு, அவரது பைக்கை அங்கிருந்து எடுத்து சென்று விட்டார். கோழிப்பண்ணை நடத்திவரும் கார்த்திக் என்பவரிடம் தான் வாங்கிய ரூபாய் 45 ஆயிரம் கடனை அடைப்பதற்காகவே இந்த கொடூர திட்டத்தை தீட்டியுள்ளார் உதயகுமார்.

அதனபடி நண்பனை கொன்றுவிட்டு, அவரது பைக்குடன் சென்ற உதயகுமார் அந்த பைக்கை பல இடங்களில் விற்க முயன்றுள்ளார். ஆனால் ஆர்.சி. புக் இல்லாததால் பைக்கை விற்க முடியவில்லை. இதனால் பைக்கை கார்த்திக்கின் கோழிப்பண்ணையில் விட்டுவிட்டு, தான் கடனை திருப்பி தரும்வரை இந்த பைக் இங்கையே நிறுக்கட்டும் என கூறிவிட்டு சென்றது போலீசார் விசாரணையில் அம்பலமானது.

இதனை தொடர்ந்து உதயகுமார் கூறிய தகவலை வைத்து போலீசார் புருஷோத்தமன்னின் உடலை தேடி வருகின்றனர். 45 ஆயிரம் கடனுக்காக நண்பனையே இளைஞர் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.