பட்டாசு கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து.! 12 வயது மகனுடன் பரிதாபமாக உயிரிழந்த தந்தை.! சோக சம்பவம்.!!
வாணியப்பாடியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி தந்தை தனது 12 வயது மகனுடன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகேயுள்ள புத்தூர்கோயில் பகுதியில் குமார் என்பவர் சொந்தமாக ஸ்ரீராம் பட்டாசு கடை என்ற ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் காலை வழக்கம் போல கடையை திறப்பதற்கு தனது 12 வயது மகன் தயாமூர்த்தியுடன் சென்றுள்ளார்.
பின் வியாபாரத்திற்கு ஏற்ப பட்டாசுகளை அடுக்கி வைத்துக் கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில் திடீரென பட்டாசு கடைக்குள் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்டு பதறிய குமார் தனது மகனுடன் தீயை அணைக்க முயன்றுள்ளார். அதற்குள் தீ பெருமளவில் பரவிய நிலையில் குமார் அவரது மகனுடன் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் நீண்ட நேரப் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். பட்டாசு கடைக்கு வந்த இருவர் படுக்காயங்களுடன் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.