1500 கிலோ வெங்காயத்தை திருடிச்சென்ற மர்மநபர்கள்! அதிர்ச்சியடைந்த விவசாயி!
1500 கிலோ வெங்காயத்தை திருடிச்சென்ற மர்மநபர்கள்! அதிர்ச்சியடைந்த விவசாயி!
வெங்காயம் விலை விண்ணை தொடும் அளவுக்கு அதிரடியாக உயர்ந்து வருகிறது. கிலோ ரூ.100 முதல் ரூ.130 வரை விற்பனை செய்யப்படுவதால் வெங்காயம் வாங்குவதற்க்கே அஞ்சுகின்றனர்.
சமையலுக்கு அத்தியாவசியமான பொருளான வெங்காய சாகுபடி அதிகமுள்ள மாநிலங்களில் பருவம் தவறிய மழையால் வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வெங்காயத்திற்கு நாடு முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை விண்ணை தொடும் அளவுக்கு அதிரடியாக உயர்ந்து வருகிறது.
இதனால் வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், தட்டுப்பாட்டை சமாளிக்கவும் வெளிநாடுகளில் இருந்து சுமார் ஒரு லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்தது.
இந்தநிலையில், பெரம்பலூர் மாவட்டம் கூத்தனூரில் முத்துகிருஷ்ணன் என்ற விவசாயி, வெங்காயம் பயிரிடுவதற்காக(விதைப்பதற்காக) 1500 கிலோ விதை வெங்காயத்தை வாங்கி தோட்டத்தில் பாதுகாத்து வைத்திருந்தார். அவர் வழக்கம் போல காலையில் வயலுக்கு வந்தபோது, ஆறு மூட்டைகளில் வைத்திருந்த வெங்காயத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
விதை வெங்காய திருட்டு தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில், விதை வெங்காயத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடிவருகிறார்கள்.