நாளை விடுமுறை அளிக்க தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்- தொழிலாளர் ஆணையர் எச்சரிப்பு
நாளை விடுமுறை அளிக்க தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்- தொழிலாளர் ஆணையர் எச்சரிப்பு
மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து நிறுவனங்களும் நாளை விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் ,தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், தொழிலாளர் ஆணையர் எச்சரித்துள்ளார்.
தமிழக தொழிலாளர் ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கை :
“தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகின்றது.
தமிழ்நாடு முழுவதுமுள்ள தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்கள், தினக்கூலி, தற்காலிக தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோருக்கு தேர்தல் நாளான நாளை அவர்கள் வாக்களிக்கும் வகையில் சம்பளத்துடன் கூடிய ஒருநாள் விடுப்பு வழங்கப்பட வேண்டும்.
அதேநேரம் நாளை விடுமுறை அளிக்க தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது குறித்து முறைப்பாடு அளிக்க மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநில கட்டுப்பாட்டு அறை சென்னையில் தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திலும், மாவட்ட அளவில் அந்தந்த மாவட்ட தொழிலாளர் நல அலுவலகங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது.
விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் தொடர்பாக பொதுமக்கள், தொழிலாளர்கள் முறைப்பாடு தெரிவிக்கமுடியும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.