பள்ளி பேருந்தை திருடிச்சென்ற மதுபோதை ஆசாமி; தள்ளாடிய வாகனத்தை மறித்து நிறுத்திய அதிகாரிகள்.. 23 வயது இளைஞர் கைது.!



cuddalore-tittakudi-man-stolen-private-school-bus

 

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி, கோழியூர் பகுதியில் சாலையோரம் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சொந்தமான சில வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும். இரவு நேரத்தில் இவை அங்கு நிறுத்தப்பட்டு, பின் காலையில் பணிகளுக்கு ஓட்டுநர்களால் எடுத்து செல்லப்படும்.

இந்நிலையில், நேற்று அதிகாலை நேரத்தில் வேப்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி பேருந்தை, மர்ம நபர் மதுபோதையில் கடத்தி சென்றுள்ளார். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் நோக்கி பேருந்து பயணித்துள்ளது. 

பேருந்து தாறுமாறாக இயங்குவதை கண்டு அதிர்ந்துபோன நெடுஞ்சாலை கண்காணிப்பு காவல்துறையினர், வேப்பூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, வேப்பூரில் வேப்பூர் காவல் துறையினர் பேருந்தை மடக்கி பிடித்தனர்.

Cuddalore

பேருந்தை இயக்கி வந்தவரை பிடித்து நடத்திய விசாரணையில், அவர் விருத்தாச்சலம் திரு வி.க நகர் பகுதியை சேர்ந்த அருணாச்சலம் (வயது 23) என்பது தெரியவந்தது. மதுபோதையில் வாகனத்தை இயக்கி வந்து சிக்கிக்கொண்டதும் உறுதியானது.

இதனையடுத்து, திட்டக்குடி காவல் துறையினரிடம் அருணாச்சலம் ஒப்படைக்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அருணாச்சலத்தை சிறையில் அடைத்தனர்.