நடுரோட்டில் விவசாயிகள் வினோத போராட்டம்; சாலையில் அண்டா வைத்து சமையல்... பொங்கல் கரும்பு கொடுக்கச்சொல்லி சம்பவம்..!

நடுரோட்டில் விவசாயிகள் வினோத போராட்டம்; சாலையில் அண்டா வைத்து சமையல்... பொங்கல் கரும்பு கொடுக்கச்சொல்லி சம்பவம்..!



cuddalore-magudanchavadi-farmers-protest

 

குள்ளஞ்சாவடியில் கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால், கடலூர் - விருத்தாசலம் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, நடுவீரப்பட்டு, குள்ளஞ்சாவடி, பண்ருட்டி, போன்ற பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பன்னீர் கரும்பு, சாகுபடி செய்துள்ளனர். இந்த பன்னீர், கரும்பு தை மாதம் பொங்கல் பண்டிகையின் போது விற்பனைக்காக அறுவடை செய்யப்படும்.

பொங்கல் பண்டிகையை ஒட்டி விவசாயிகளிடம், தமிழக அரசு இடைத்தரகர்கள் முன்பணமாக, கரும்புக்கு அட்வான்ஸ் கொடுத்து வைத்து விடுவார்கள். இதனால் கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால் இந்த வருடம் பொங்கல் பரிசாக அரசு நியாய விலைக் கடைகளில் கரும்பு கொடுக்கப்படாது என அறிவித்த நிலையில், கரும்பை யாரும் வாங்க முன் வரவில்லை.

நேற்று முதலமைச்சர் அளித்த பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இல்லை என்று கரும்பு விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் தங்களுடைய கரும்பை யாரும் வாங்க முன் வரவில்லை என்றும், பன்னீர் கரும்பு அனைத்தும் விவசாயம் செய்து வீண் போகப் போவதாகவும் விவசாயிகள் அதிர்ச்சியடைந்து மன வேதனையில் இருக்கின்றனர்.

இதனால் இன்று காலை கடலூர் - விருத்தாச்சலம் சாலை குள்ளஞ்சாவடியில், 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி விவசாயிகளை சமாதானப்படுத்தினர். 

ஆனால் அதனை ஏற்க மறுத்த விவசாயிகள் நடு ரோட்டில் அண்டா, குண்டாக்கள் வைத்து சமைத்து கொண்டும், ஒரு சிலர் தட்டை கையில் வைத்துக் கொண்டு பிச்சை எடுத்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு எங்கள் கோரிக்கையை ஏற்று எங்களிடம் கரும்பை வாங்கி, பொங்கல் பரிசாக, மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும், இதுதான் எங்களது கோரிக்கை என்றும், அதுவரை எங்களது போராட்டம் தொடரும் என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.