கணவனை காக்க ஓடும் ரயிலில் இருந்து குதித்த மனைவி.. குழந்தைகள் கண்முன் சோகம்.!
தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தபோது தம்பதிகளுக்கு நேர்ந்த சோகம் குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரயில் பயணம்:
Kallakurichi Couple Dies in Accident: கள்ளக்குறிச்சி மாவட்டம், அய்யனார் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகண்டன் (37). இவரது மனைவி கலையரசி. இந்த தம்பதி தங்களின் மூன்று பெண் குழந்தைகளுடன் மும்பையில் வசித்து அங்குள்ள ஓட்டலில் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில், சொந்த ஊரில் நடைபெற்ற உறவினர் வீட்டுத் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, குடும்பத்துடன் மும்பையிலிருந்து தமிழ்நாடு நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: "விடாமல் துரத்திய கள்ளக்காதல்..." கழுத்தை நெரித்து கணவன் கொலை.!! மனைவி, காதலன் வெறி செயல்.!!
சொந்த ஊர் வந்தபோது சோகம்:
இதற்காக, மும்பையில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் அவர்கள் பயணம் செய்துள்ளனர். இன்று அதிகாலை ரயில் ஆரணி அடுத்த வடமாதிமங்கலம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, சிவகண்டன் ரயிலின் கதவைத் திறந்து, படிக்கட்டில் நின்று வெளியே பார்த்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக ஓடும் ரயிலிலிருந்து கீழே விழுந்துள்ளார்.

கணவன் - மனைவி பலி:
இதைக் கண்ட அவரது மனைவி கலையரசி, கணவனை காப்பாற்ற முயன்று உடனடியாக அவரை பிடிக்க முயன்றுள்ளார். ஆனால் அந்த முயற்சி விபரீதமாக முடிந்தது. கணவன் - மனைவி இருவரும் ஒரே நேரத்தில் ரயிலிலிருந்து கீழே தவறி விழுந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம், ரயிலில் பயணித்த சக பயணிகள் மற்றும் அருகிலிருந்த மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
காவல்துறையினர் விசாரணை:
உடனடியாக தகவல் அறிந்த களம்பூர் ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் காட்பாடி ரயில்வே போலீசார், உயிரிழந்த சிவகண்டன் மற்றும் கலையரசி ஆகியோரின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் பெற்றோரை இழந்த மூன்று பெண் குழந்தைகளின் நிலை குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் வேதனையடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: #Breaking: காலையிலேயே மரண செய்தி.. அரசு பேருந்து - வேன் நேருக்குநேர் மோதி கோர விபத்து.. இருவர் பலி.!