கூட்டு பாலியல் வன்கொடுமை; பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்... சிறுவன் உட்பட 4 பேர் கைது...!
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கிராமத்தில் தாயை இழந்த 11ஆம் வகுப்பு படித்து வரும், 17 வயதான சிறுமி தந்தையுடன் வசித்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு இந்த சிறுமி காணாமல் போனார். கூலி வேலை செய்யும் அவரது தந்தை பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால், தேவகோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து காவல்துறையினர் சரியாக விசாரிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் சிறுமியின் தந்தையே மகளை தேட ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் தேவகோட்டை பேருந்து நிலையம் அருகே மிகவும் மோசமான நிலையில் அவருடைய மகளை கண்டுபிடித்துள்ளார். தன்னை ஒரு கும்பல் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த சிறுமி தந்தையிடம் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து காவல்துறையினர் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். பாவனக்கோட்டையைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை கைது செய்து விசாரித்துள்ளனர். விசாரணையில் கார்த்திக் இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளவர்களின் பெயர்களை கூறியுள்ளார்.
கார்த்திக்கின் நண்பர்களான விஜய், முகமது ஷரீப் மேலும் அந்த பகுதியை சேர்ந்த ஒரு சிறுவன் ஆகியோர் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் சிறுமியை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தியது தெரியவந்துள்ளது.
இதை தொடர்ந்து கார்த்திக்,புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டினத்தைச் சேர்ந்த முகமது செரிப், திருவேகம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த விஜய், அந்த பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவன் ஆகியவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிவகங்கை கோர்டில் ஆஜர் படுத்தினர்.
இதில் மூன்று பேரை சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிபதி, சிறுவனை மட்டும் இளம் சிறார் கோர்ட்டில் ஆஜர் செய்ய உத்தரவிட்டார். இதை தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சிறுமி கூறிய வாக்கு மூலத்தின் அடிப்படையில் இன்னும் சில குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
மேலும் சிறுமியுடன் செல்போனில் பேசியவர்களின் எண்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. சிறுமி கூட்டுப் பகுதியில் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், தேவகோட்டை பகுதியில் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.