இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!



Chennai RMC Weather Update 8 th Aug Morning

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "8 ஆம் தேதியான இன்று மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, கரூர், மதுரை மற்றும் ஏனைய வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானமழை முதல் மிதமான மழை பெய்யலாம். 

9 ஆம் தேதி மற்றும் 10 ஆம் தேதியை பொறுத்தவரையில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 28 டிகிரி செல்சியசும் பதிவாகலாம். 

மீனவர்களுக்கான எச்சரிக்கையாக இன்று தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல், இலட்சத்தீவு, கேரள - கர்நாடக கடலோர பகுதி, அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 45 கிலோமீட்டர் வேகமும் முதல் 65 கிலோ மீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என்பதால், இப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்" என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.