காருக்கு இஎம்ஐ கட்ட 3½ ஆண்டுகளாக கொள்ளையடித்து வந்த டிரைவர்! விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்.!

காருக்கு இஎம்ஐ கட்ட 3½ ஆண்டுகளாக கொள்ளையடித்து வந்த டிரைவர்! விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்.!


car driver arrest for theft case

சென்னை குன்றத்தூரை அடுத்த கோவூர், தண்டலம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவரது வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள் சமீபத்தில் திருட்டு போனது. இதுகுறித்து சந்தோஷ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அதேபோல் குன்றத்தூர் மற்றும் மாங்காடு பகுதிகளில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்துள்ளது.

அனைத்து இடங்களிலும் ஒரே பாணியில் கைவரிசை காட்டியதால் ஒருவரே இந்த திருட்டில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதனையடுத்து தனிப்படை போலீஸார் கொள்ளை நடந்த இடங்களில் பொருத்தப்பட்டிருந்த 150-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராப் பதிவுகளை ஆய்வு செய்தனர்.

சிசிடிவி கேமராப் பதிவுகளில் லுங்கி, பனியன் அணிந்துச் செல்லும் இளைஞர் ஒருவர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து பம்மல் பகுதியில் சென்று சந்தேகத்தின் பேரில் பாலாஜி (25) என்பவரை விசாரித்தபோது, அவர் மீது மேலும் சந்தேகம் ஏற்பட்டதால் அவரைப் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை ,மேற்கொண்டதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

விசாரணையில் அவர், குன்றத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 3½ ஆண்டுகளாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், டிரைவரான பாலாஜி, சொந்தமாக கார் வாங்கி ஓட்டி வந்துள்ளார். காருக்கான மாத தவணையை கட்ட முடியாததால் திருட்டு தொழிலில் ஈடுபட தொடங்கினார். 

இதனால் பகலில் தனியாக இருக்கும் மற்றும் பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு இரவில் மோட்டார் சைக்கிளில் லுங்கி மற்றும் பனியன் மட்டும் அணிந்து கொண்டு அவர் நோட்டமிட்ட வீட்டுக்கு சென்று கொள்ளையடிப்பார். கண்காணிப்பு கேமராவில் சிக்காமல் இருக்க மோட்டார் சைக்கிளின் முன் மற்றும் பின் பகுதிகளில் மின் விளக்கை அணைத்துவிடுவார்.

இவ்வாறு 3½ ஆண்டுகளாக தொடர் திருட்டில் ஈடுபட்டு கொள்ளையடித்த பணத்தில் காருக்கான மாத தவணையை கட்டி முடித்ததுடன், புதிதாக மேலும் ஒரு கார் வாங்கி உள்ளார். மேலும் மனைவிக்கு நகைகளைப் பரிசாக வாங்கிக் கொடுத்துள்ளார். கைது செய்யப்பட்ட பாலாஜியிடமிருந்து 65 சவரன் தங்க நகைகள், 3 கிலோ வெள்ளி பொருள்கள், கார், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்தனர்.