பா.ஜ.க. நிர்வாகிகள் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம்.! அண்ணாமலை உத்தரவு.! என்ன காரணம்.?

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பா.ஜ.க., நிர்வாகிகள் தற்காலிகமாக நீக்கப்படுவதாக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கடந்த வாரம் பிரதமர் மோடியின் 100-வது மன் கீ பாத் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சி தொடர்பாக சமூக வலைதளங்களில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக பா.ஜ.க. வினருக்கும், இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இரு தரப்பினரும் நடுரோட்டில் ஒருவருக்கொருவர் கட்டையால் தாக்கிக்கொண்டனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்தநிலையில் தாராபுரம் பா.ஜ.க. நிர்வாகிகள் சிலரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்து அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருப்பூர் தெற்கு மாவட்டம் தாராபுரம் பேருந்து நிலையம் அருகில் பா.ஜ.க. நிர்வாகிகள் சிலர் வன்முறையில் ஈடுபட்டு கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை குழுவானது விசாரணை செய்து முழுமையாக அறிக்கை அளிக்கும் வரை கட்சியின் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள் என அறிவித்துள்ளார்.