வீடியோ: பால்கனியிலிருந்து கீழே விழுந்த குழந்தை. மீட்கப்படும் வைரல் காட்சிகள்.



Baby fell down from the balcony in chennai

சென்னையில் குழந்தை ஒன்று அந்தரத்தில் தொங்கும் வீடியோ காட்சிகளும், குழந்தையை மீட்கும் காட்சிகளும் இணையத்தில் வெளியாகி வரைலாகிவருகிறது.

சென்னை ஆவடி அருகே திருமுல்லைவாயலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருபவர்கள் வெங்கடேஷ் - ரம்யா தம்பதியினர். இவர்களின் 7 மாத குழந்தை ஹைரின் அடுக்கு மாடி குடியிருப்பின் பால்கனியில் உள்ள தகர சீட்டில் தவறி விழுந்துள்ளது.

அதிர்ஷ்டவசமாக குழந்தை கீழ விழாமல், அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே கூச்சலிடவே, அங்கிருந்தவர்கள் ஓடிவந்து, குழந்தை கீழே விழாதபடி பெரிய பெட்ஷீட்டை பிடித்துக்கொண்டனர். அதேநேரம், மேலும் சிலர், குழந்தை தொங்கிக்கொண்டிருந்த இடத்திற்கு கீழே உள்ள வீட்டின் பால்கனி வழியே சென்று குழந்தையை மீட்க முயற்சி செய்தனர்.

ஒருவழியாக பால்கனி வழியாக சென்ற இளைஞர் ஒருவர் குழந்தையை பத்திரமாக மீட்டு கீழே கொண்டுவந்தார். கீழே விழுந்ததில் குழந்தையின் கை, கால்களில் சிறிய காயம் ஏற்பட்டதை அடுத்து குழந்தை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், குழந்தை நலமுடன் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, குழந்தை எப்படி கீழே விழுந்தது, என்ன நடந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். பார்க்கவே திகிலூட்டும் இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.