நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்! ஓட்டுனரின் சாமர்த்தியம்.! நொடிப்பொழுதில் உயிர் பிழைத்த 6 பேர்.!



6 people escaped from car fire accident

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ். 24 வயது நிரம்பிய இவர் ஊர்க்காவல் படையில் உள்ளார். இந்தநிலையில்,  திண்டுக்கல் முஸ்லிம் தெருவை சேர்ந்த உபயதுல்லா என்பவருக்கு சொந்தமான ஓட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார் ராகேஷ். உபயதுல்லா தனக்கு சொந்தமான காரை வாடகைக்கும் அனுப்பி வந்துள்ளார்.

இந்த நிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த டாக்டர் பாலாஜி தனது குடும்பத்தினருடன் திருப்பதி செல்ல முடிவு செய்தார். இதற்காக உபயதுல்லாவின் காரை வாடகைக்கு எடுத்துள்ளார். அந்த காருக்கு ராகேஷ் டிரைவராக சென்றார். காரில் டாக்டர் பாலாஜி, அவரது பெற்றோர் மற்றும் 2 குழந்தைகளும் இருந்தனர்.

இந்தநிலையில், திருப்பதியில் தரிசனத்தை முடித்துக் கொண்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இதனையடுத்து இன்று அதிகாலை அவர்கள் திருச்சி மாவட்டம் சமயபுரத்தை அடுத்த சிறுகனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது காரின் முன் பகுதியில் இருந்து அளவுக்கு அதிகமான புகை வந்தது. உடனடியாக ராகேஷ் காரை நிறுத்த முயற்சித்துள்ளார்.

ஆனால் கார் நிற்காததால் உடனடியாக சுதாரித்துக் கொண்டு, காரின் கண்ணாடிகளை உடைத்து அனைவரையும் மீட்டுள்ளார். அனைவரையும் மீட்டு உடனே சுமார் 10 மீட்டர் தூரத்துக்கு அப்பால் அழைத்தும் சென்றுள்ளார், உடனடியாக கார் தீப்பிடித்து எரிந்துள்ளது.

அங்கிருந்தவர்கள் தீயை அணைக்க முயன்ற போதும், பலமான காற்று அடித்ததால் மேலும் தீ பற்றி எரிந்தது. இதனையடுத்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.