தொழில் அதிபரை கடத்தி ரூ.2 கோடி பணம் கொள்ளை! முக்கிய குற்றவாளிக்கு போலீசார் வலைவீச்சு!
தொழில் அதிபரை கடத்தி ரூ.2 கோடி பணம் கொள்ளை! முக்கிய குற்றவாளிக்கு போலீசார் வலைவீச்சு!
சென்னை முத்தியால்பேட்டையை பகுதியை சேர்ந்தவர் அக்பர். இவர் பிரிண்டிங் நிறுவனம், ஆடைகள் ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறார். இவரை கடந்த 17-ஆம் தேதி காரில் வந்த மர்ம கும்பல் கடத்தி பணம் பறித்துள்ளனர்,
இந்தநிலையில், முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் அக்பர் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கடந்த 17-ம் தேதி தான் மண்ணடி அருகே சென்றபோது தன்னை காரில் கடத்தி சென்று திருவான்மியூர் அருகே ரூ.2 கோடி ரூபாய் பணத்தை பறித்து கொண்டு இறக்கி விட்டதாக தெரிவித்திருந்தார்.
அவர் அளித்த புகாரின் பேரில் தனிப்படை போலீசார் இதுதொடர்பாக அதிரடி விசாரணையில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக 6 பேரை கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை பறிமுதல் செய்த போலீசார், ஹவாலா பணம் என்பதால் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கவும் திட்டமிட்டுள்ளனர். இவர்கள் பயன்படுத்திய 2 கார்கள் 2 செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த கடத்தல் சம்பவத்துக்கு முக்கிய மூளையாக செயல்பட்டது தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த தவுபிக் என்பதும், இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. முக்கிய குற்றவாளியான தவுபீக்கை தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.