இது பயமா? இல்ல பதற்றமா? இரண்டு தொகுதிக்கே 11 அமைச்சர்கள்...! விஜய் அரசை அசால்ட்டாக எதிர்க்கும் எதிர்க்கட்சிகள்! உளவுத்துறை கொடுத்த ரகசிய ரிப்போர்ட்...!!!
தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 சட்டமன்றத் தனித்தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. பொதுத்தேர்தல் முடிந்து சில மாதங்களிலேயே இந்த தேர்தல் நடைபெறுவதால், ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்துக்கு இது முக்கியமான முதல் அரசியல் சோதனையாக பார்க்கப்படுகிறது. இதற்காக 11 அமைச்சர்கள், 8 எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய தேர்தல் பணிக்குழுவை அக்கட்சி அறிவித்துள்ளது.
இரு தொகுதிகளுக்கும் 3 அமைச்சர்கள் பொது கண்காணிப்பாளர்கள்
த.வெ.க தலைமை வெளியிட்ட அறிவிப்பின்படி, இரு தொகுதிகளின் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க N. ஆனந்த் (புஸ்ஸி ஆனந்த்), K.A. செங்கோட்டையன், CTR நிர்மல் குமார் ஆகிய 3 அமைச்சர்கள் பொது கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மதுராந்தகம் தொகுதியின் முதன்மைப் பொறுப்பாளராக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் அமைச்சர்கள் H. ராஜ்குமார், K. தென்னரசு, I. வினோத் ஆகியோர் இணைப் பொறுப்பாளர்களாக செயல்பட உள்ளனர். P. சரவணமூர்த்தி, S. தியாகராஜன், B. விஜயராஜ், காமாட்சி ஆகிய 4 எம்.எல்.ஏ.க்களும், செங்கல்பட்டு தெற்கு மாவட்டச் செயலாளர் M.S. பாலாஜியும் துணைப் பொறுப்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர்.
தாராபுரத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் குவிப்பு
கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த தாராபுரம் (தனி) தொகுதிக்கு அமைச்சர் Dr. K.G. அருண்ராஜ் முதன்மைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர்கள் M. விஜய் பாலாஜி, T. விஜயலட்சுமி, லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோர் இணைப் பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர S. பாலமுருகன், V. சத்தியபாமா, K. ராம்குமார், C.S. திலீப், M. சத்யா ஆகிய 5 எம்.எல்.ஏ.க்கள் துணைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தொகுதி வாரியாக நிர்வாகிகளை ஒருங்கிணைத்து தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
தேர்தல் பணிக்குழு குறித்து மாறுபட்ட கருத்துகள்
ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால், இரு தொகுதிகளிலும் கட்சி அமைப்பு ரீதியாக அதிக கவனம் செலுத்துவதாக த.வெ.க. தரப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக தாராபுரத்தில் உள்ளூர் அரசியல் நிலவரம் மற்றும் வாக்கு சிதறல் தொடர்பான அம்சங்களை கருத்தில் கொண்டு மூத்த நிர்வாகிகள் களமிறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, இரண்டு தொகுதிகளுக்கும் இவ்வளவு பெரிய அளவில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டிருப்பது குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்துள்ளன. இதை பதற்றத்தின் வெளிப்பாடாக எதிர்க்கட்சிகள் கூறும் நிலையில், துல்லியமாக திட்டமிடப்பட்ட தேர்தல் வியூகம் என்றும், மக்களின் குறைகளை நேரடியாக அறிந்து பணியாற்றுவதற்கான அமைப்பு என்றும் த.வெ.க. தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளின் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவு, ஆளுங்கட்சிக்கு கிடைக்கும் அரசியல் ஆதரவை மதிப்பிடும் முக்கிய கட்டமாக அமைய உள்ளது.
இதையும் படிங்க: தாராபுர இடைத்தேர்தலில் முதல்வர் விஜய்க்கு காத்திருக்கும் அதிர்ச்சி! வெளியான ஷாக் ரிப்போர்ட்..!!!!