"திமுகவின் மைனாரிட்டி அரசு?"... பெரும்பான்மைக்கு விஜய் என்ன செய்ய போகிறார்.?!
கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்தது. மே 4ஆம் தேதியான நேற்று அதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தமிழகம் தாண்டி பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ளது. அதற்கு காரணம் தமிழக வெற்றி கழகத்தின் எழுச்சி தான்.
முதல்முறையாக கட்சி தொடங்கி, எந்த ஒரு அடிப்படை கட்டமைப்பும் இல்லாமல், பெரிய அளவில் பிரச்சாரங்கள் கூட செய்யாமல் அதிகப்படியான தொகுதிகளை வென்றுள்ளது. இது எந்த கருத்துக்கணிப்பிலும் கூட எதிர்பார்க்கப்படாத ஒன்றாகும். இந்த நிலையில், 108 இடங்களில் TVK வென்றிருந்தாலும், அவர்கள் ஆட்சியைப் பிடிக்க 118 இடங்கள் தேவைப்படுகின்றன.
தற்போது பெரும்பான்மையை நிரூபிக்கும் முயற்சியில் TVK ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. இது திமுக உள்ளிட்ட கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. ஆனால், கடந்த 1952ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் மெட்ராஸ் மாகாணத்தில் 375 தொகுதிகள் இருந்தன.
இதையும் படிங்க: திமுக-அதிமுக வாக்குகள் பிரியுமா?.. இன்று தேர்தல் அறிக்கையை வெளியிடும் தவெக.!

அதில் 188 இடங்கள் பெரும்பான்மைக்கு தேவைப்பட்டது. அப்போது 152 இடங்களை மட்டுமே காங்கிரஸ் கட்சி வென்றிருந்தது. மற்ற கட்சிகளின் கூட்டணி ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. அதேபோல் 2006ஆம் ஆண்டிலும் திமுக கூட்டணி 163 இடங்களை வென்றது. ஆனால் திமுக வெறும் 96 இடங்களில் தான் வெற்றி பெற்றது. மற்றவை கூட்டணி கட்சிகளின் இடங்களாகும்.
இதனால் கருணாநிதி தலைமையிலான அந்த ஆட்சியை ஜெயலலிதா எப்போதும் “மைனாரிட்டி அரசு” என்று கடுமையாக விமர்சித்து வந்தார்.
தற்போது விஜய்க்கும் அதே போன்ற ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. இருந்தாலும், ஆட்சி அமைக்க மிக சொற்ப இடங்கள் மட்டுமே குறைவாக இருப்பதால் இது மைனாரிட்டி அரசாக கருதப்படாது என்றே அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: முன்னிலையில் தவெக.. எம்.ஜி.ஆர் காலத்துக்கு பின்.. தமிழக தேர்தலில் கவனம் ஈர்த்த விஜய்..!