"விமர்சனங்களை ஏற்கத்துணிவில்லாத அரசு" - சர்க்கார் படத்துக்கு கமல் ஆதரவு!
"விமர்சனங்களை ஏற்கத்துணிவில்லாத அரசு" - சர்க்கார் படத்துக்கு கமல் ஆதரவு!
சர்க்கார் படத்தில் விஜய் பேசும் வசனங்கள் ஆளும் அதிமுக கட்சிக்கு எதிராக இருப்பதாகவும், சர்கார் திரைப்படத்தில் அரசின் இலவச திட்டங்களை விமர்சனம் செய்திருப்பதாகவும், வில்லி கதாப்பாத்திரத்திற்கு கோமளவள்ளி என்று பெயர் சூட்டி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்துள்ளதாகவும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் சர்க்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும், அந்த காட்சிகளை நீக்காவிட்டால் சர்க்கார் படம் தடைசெய்யப்படும் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரைத் தொடர்ந்து சட்ட அமைச்சர் சண்முகம் சர்க்கார் படத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும் இன்று அமைச்சர் ஜெயக்குமார், "ஜெயலலிதா இல்லாததால், நடிகர்களுக்கு குளிர் விட்டு போய் விட்டது. கோழைகள் போல இப்போது செயல்படுகின்றனர். நடிகர் விஜய் தலைகீழாக நின்றாலும் எம்.ஜி.ஆராக முடியாது. உங்களை முன்னிலைபடுத்தி கொள்ளுங்கள். அதற்காக யாரையும் புண்படுத்த கூடாது" என்று நடிகர் கடுமையாக விமர்சித்தார்.
இதனை தொடர்ந்து மதுரை, கோவை, சென்னையில் சர்கார் படத்திற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மதுரை, கே.கே.நகரில் உள்ள சினிப்பிரியா, கோவையில் உள்ள சாந்தி தியேட்டர், சென்னையில் காசி தியேட்டர் முன்பு ஏராளமான அதிமுக., தொண்டர்கள் கூடி சர்கார் படத்திற்கு எதிராக கோஷம் எழுப்பியதோடு, அங்கு வைக்கப்பட்டிருந்த சர்கார் பட போஸ்டர், பேனர்களை அடித்தும், கிழித்தும் துவம்சம் செய்துள்ளனர்.
இந்நிலையில் நடிகர் மற்றும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல் சர்க்கார் படத்திற்கு ஆதரவாக தனது த்விட்டேர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் " முறையாகச்சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு, சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல. விமர்சனங்களை ஏற்கத்துணிவில்லாத அரசு தடம் புரளும். அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும். நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும்." என பதிவிட்டுள்ளார்.
முறையாகச்சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு,சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல.விமர்சனங்களை ஏற்கத்துணிவில்லாத அரசு தடம் புரளும்.அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும்.நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும்.
— Kamal Haasan (@ikamalhaasan) November 8, 2018