"பெண்கள் குளியல் அறையில் ரகசிய கேமரா" - விடுதி உரிமையாளர் அட்டூழியம்

"பெண்கள் குளியல் அறையில் ரகசிய கேமரா" - விடுதி உரிமையாளர் அட்டூழியம்


hidden-camera-in-chennai-ladies-hostel

சென்னையில் தனியார் பெண்கள் விடுதியின் குளியலறையில் ரகசிய கேமரா கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுதி உரிமையாளர் செய்த அட்டூழியத்தால் பெண்கள் மனவேதனை.

வெளி ஊர்களிலிருந்து சென்னைக்கு வந்து பெரிய பெரிய ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் தனியார் விடுதிகளில் வாடகைக்கு தங்குவது வழக்கம். இதற்கென சென்னையின் பல பகுதிகளில் விடுதிகள் தனியார் ஆட்களின் மூலம் நிர்வாகிக்கப்பட்டு வருகிறது.

Hidden camera

இதேபோல் ஒரு பெண்கள் விடுதி சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் முதல் தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அறைகளை வாடகைக்கு எடுத்து சஞ்சீவ்(45) என்னவர் விடுதி நடத்தி வருகிறார். திருச்சியை சேர்ந்த இவர் சமூக வலைதளங்களின் மூலம் பெண்களுக்கான விடுதி என உள்ளது என விளம்பரம் செய்துள்ளார். இதனையடுத்து விடுதியில் பெரிய பெரிய ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பேயிங் கெஸ்டாக தங்கியுள்ளனர். 

Hidden camera

சில நாட்களாகவே அறையில் சீரமைப்பு பணிகள் செய்வதாக கூறி அடிக்கடி ஏதோ வேலை செய்துள்ளார் உரிமையாளர் சஞ்சீவ். இதனால் அங்கு தங்கியிருந்த பெண்களுக்கு அவரின் மேல் சந்தேகம் ஏற்பட்டது. ஒருவேளை ரகசிய கேமரா ஏதேனும் பொருத்தியிருப்பாரோ என அவர்கள் சந்தேகம் அடைந்தனர். இதனால் உஷாரான அந்த பெண்கள் அறைகளை பரிசோதிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து தங்களது மொபைல் போனில் Hidden Camera Detector App என்ற செயலியை பதிவிறக்கம் செய்தனர். அந்த செயலியின் உதவியுடன் விடுதியின் பல்வேறு இடங்களில் ரகசிய கேமராக்கள் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். யாருக்கும் தெரியாமல் கழிவறை, படுக்கையறை, துணி மாட்டும் கைப்பிடி (ஆங்கர்) உள்ளிட்ட இடங்களில் கண்களுக்கு தெரியாத சிறிய அளவிலான ரகசிய கேமராக்களை சஞ்சீவ் வைத்திருந்தது தெரியவந்தது.

Hidden camera

அதனைத்தொடர்ந்து உஷாரான பெண்கள் அனைவரும் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சஞ்சீவை கைது செய்த ஆதம்பாக்கம் போலீசார் அவரை அழைத்து சென்று தங்கும் விடுதியில் விசாரணை மேற்கொண்டு அறையில் இருந்த ரகசிய கேமராக்களையும், அவரது எலக்ட்ரானிக் சாதனங்கள், 16 செல்போன், ஆதார் அட்டை, பான் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற போலி ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட சஞ்சீவ் மீது 2011 முதல் பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும், இவர் பல பெயர்களில் போலி ஆவணங்கள் வைத்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் சஞ்சீவின் பின்னணியில் யார் இருக்கிறார்கள்..? இதற்கு முன்பும் அவர் ஏதேனும் விடுதியில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளாரா..? போன்ற பல கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.