என்ன கொடுமை இது..? 34 பயணிகளுடன் திடீரென பேருந்தை எடுத்துச்சென்ற மர்மநபர்கள்.! விசாரணையில் வெளியான பகீர் தகவல்.!

என்ன கொடுமை இது..? 34 பயணிகளுடன் திடீரென பேருந்தை எடுத்துச்சென்ற மர்மநபர்கள்.! விசாரணையில் வெளியான பகீர் தகவல்.!



UP Bus Hijacked By Loan Recovery Agents

உத்திரபிரதேச மாநிலத்தில் இன்று காலை ஒரு வினோதமான சம்பவம் நடந்துள்ளது. 34 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்தை வழிமறித்த சிலர் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனரை கீழே இறக்கிவிட்டு பேருந்தை எடுத்து சென்றுள்ளனர்.

தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்த சிலர் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். 34 பயணிகளுடன் குருகிராமிலிருந்து மத்திய பிரதேசத்திற்கு சென்று கொண்டிருந்த பேருந்தை அவர்கள் பாதி வழியில் தடுத்து நிறுத்தி பயணிகளுடன் பேருந்தை ஓட்டிச்சென்ற சம்பவம் சமூக ஊடகங்களில் பீதியையும், சீற்றத்தையும் தூண்டியது.

பின்னர் பேருந்து குறித்து போலீசார் விசாரணையில் இறங்கியபோது நிதி நிறுவன பணியாளர்களால் ஓட்டிச்செல்லப்பட்ட பேருந்து உ.பி.யின் எட்டாவா மாவட்டத்தில் பயணிகள் இல்லாமல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் இருந்த பயணிகள் என்ன ஆனார்கள்? என்ன நடந்தது என யாருக்கும் தெரியவில்லை.

ஒருவழியாக போலீசார் அந்த பேருந்தில் பயணித்த ஒரு பயணியைக் கண்டுபிடித்து அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். சில கிலோமீட்டர் ஓட்டிய பின்னர், பயணிகள் கீழே இறங்கி, ஏற்கனவே நெடுஞ்சாலையில் காத்திருந்த மற்றொரு பேருந்தில் ஏறி ஜான்சிக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கிருந்து அனைவரும் வெவ்வேறு பேருந்துகளில் தங்கள் இடங்களுக்குச் சென்றதாகவும் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பேருந்தின் உரிமையாளரிடம் விசாரித்தபோது சில நாட்களுக்கு முன்பு ஒரு பண தகராறு தொடர்பாக சிலர் தங்கள் வீட்டிற்கு வந்ததாகவும், அவர்கள்தான் பேருந்தை எடுத்து சென்றிருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

34 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று நடுவழியில் கடத்தப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.