படேல் சிலை அருகே திண்டாடும் தமிழ் மொழி! 3000 கோடி செலவு செய்த மத்திய அரசுக்கு ஒரு தமிழர் கிடைக்கவில்லையா?

படேல் சிலை அருகே திண்டாடும் தமிழ் மொழி! 3000 கோடி செலவு செய்த மத்திய அரசுக்கு ஒரு தமிழர் கிடைக்கவில்லையா?



statue-of-unity-in-tamil-language

182 மீட்டர் உயரத்தில் குஜராத்தின் நர்மதை ஆற்றின் அணை அருகே 33 மாதங்களில் கட்டிமுடிக்கப்பட்ட உலகிலேயே மிக உயரமான சிலை சர்தார் வல்லபாய் படேலின் சிலை. இந்த சிலையானது படேலின் 143வது பிறந்த நாளான இன்று நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியால் நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

3000 கோடி செலவில் மத்திய அரசால் கட்டப்பட்டுள்ள இந்த சிலைக்கு சர்தார் பட்டேல் இந்திய மாநிலங்களை இணைத்ததை நினைவு கூறும் வண்ணமாக இதற்கு The Statue of Unity என ஆங்கிலத்தில் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழில் 'ஒற்றுமையின் சிலை' என அழகாக மொழிபெயர்க்கலாம். 

ஆனால் சர்தார் படேல் சிலை வளாகத்தில் பல மொழிகளில் அந்த சிலையின் பெயர் எழுதப்பட்டுள்ள பதாகையில் தமிழில் ''ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி" என்று எழுதப்பட்டுள்ளது. 

statue of unity in tamil language

உலகிலேயே உயரமான சிலை அருகில் உலகில் தொன்மையான மொழியான தமிழை இவ்வளவு மோசமாக மொழிபெயர்த்தவர் யார் என்பது தெரியவில்லை. 3000 கோடி செலவு செய்து சிலையை நிறுவும் மத்திய அரசுக்கு தமிழ் மொழியை மொழிபெயர்ப்பதற்கு ஒரு தமிழர் கிடைக்கவில்லையா? இது இந்தியாவில் வாழும் 8 கோடி தமிழர்களையும் இழிவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளது.

பின்னர் இதனை குறித்து சிலர் கேள்வி எழுப்பவே தமிழில் எழுதப் பட்டிருந்த அந்தப் பெயரினை மட்டும் வண்ண சாயம் மூலம் அழித்துள்ளார்கள். ஆனால் தமிழில் எழுதப்பட்டிருக்கும் அந்த பெயர் இன்னும் தெரிந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த வகையில் இதன் உள்நோக்கம் என்னவாக இருக்கும்? தவறாக எழுதி தமிழ் மொழியை அந்தப் பதாகையிலிருந்து நீக்க வேண்டும் என்பது நோக்கமாக இருக்குமோ?

statue of unity in tamil language

இன்று நடைபெற உள்ள இந்த சிலை திறப்பு விழா விழாவில் தமிழக அமைச்சர்கள் மாபா பாண்டியராஜன் மற்றும் கடம்பூர் ராஜு ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த உலகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட எத்தனையோ புதிய கண்டுபிடிப்புகளுக்கு தமிழில் வார்த்தைகளை கண்டறிந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள். ஆனால் இன்றோ இந்தியாவில் உருவாகியுள்ள இந்த சிலையின் பெயரை தமிழில் மொழிபெயர்ப்பதற்கு ஒரு தமிழர் கிடைக்கவில்லையா  என்று எண்ணும்போது மிகவும் வருத்தமாக உள்ளது.