கொரோனா நேரத்தில் வாழைப்பழ வியாபாரம் செய்யும் ஏழை ஆசிரியர்! மாணவர்கள் செய்த அசத்தல் காரியம்!
கொரோனா நேரத்தில் வாழைப்பழ வியாபாரம் செய்யும் ஏழை ஆசிரியர்! மாணவர்கள் செய்த அசத்தல் காரியம்!
ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் தெலுங்கு ஆசிரியராக பணியாற்றி வந்தவர் விவசாய குடும்பத்தை சேர்ந்த வெங்கட சுப்பையா. இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்களும் உள்ளனர். இவர் தனது 17000 சம்பளத்தில் குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்.
இந்தநிலையில், கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு வெங்கட சுப்பையா மற்றும் அவருடன் பணியாற்றும் 5 பேரையும் வேலை திருப்திகரமாக இல்லை எனக்கூறி வேலையை விட்டு நீக்கியுள்ளனர்.
பாடங்களை எடுப்பதைக் காட்டிலும் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதே பெரும் பணியாக தனக்கு கொடுக்கப்பட்டதாகவும், அதில் தவறியதால் வேலையை விட்டு நீக்கப்பட்டதாகவும் வெங்கட சுப்பையா தெரிவித்துள்ளார். மேலும், தனது மகனின் மருத்துவ செலவிற்காக வாங்கப்பட்ட கடனையும் அடைப்பதற்கு சிரமப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் குடும்பத்தை காப்பாற்ற வேறு வழி இல்லாமல் வாழைப்பழம் விற்கத் தொடங்கிவிட்டார் ஆசிரியர் வெங்கட சுப்பையா. ஆசிரியரின் நிலைமையை அறிந்த அவரிடம் படித்த முன்னாள் மாணவர்கள் அவருக்கு பண உதவி வழங்கியுள்ளனர். 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் மொத்தமாக 86300 ரூபாயை அவருக்கு வழங்கி உதவி செய்துள்ளனர்.