இறந்த மகனின் உடலை தோளில் சுமந்து கண்ணீரோடு நடந்த தந்தை! நடந்தது என்ன? அதிர்ச்சி சம்பவம்!!!
ஒடிசா மாநிலம் பலங்கிர் மாவட்டத்தில் உள்ள கண்டாபஞ்சி அரசு மருத்துவமனை முன்பு பதிவான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. தீவிர உடல்நலக்குறைவால் உயிரிழந்த தனது சிறுவனின் உடலை தந்தை தோளில் தூக்கிச் சென்ற காட்சி அதில் இடம்பெற்றிருந்தது. ஆனால், வீடியோவின் பின்னணி குறித்து மருத்துவமனை நிர்வாகம் தற்போது விளக்கம் அளித்துள்ளது.
சிகிச்சைக்காக அழைத்து வந்த சிறுவன் உயிரிழப்பு
கண்டாபஞ்சி பகுதியில் தொழிலாளியாக பணியாற்றி வரும் அந்த நபர், உடல்நிலை மோசமாக இருந்த தனது மகனை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். மருத்துவர்கள் பரிசோதித்தபோது சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, சட்டப்பூர்வ நடைமுறையின் ஒரு பகுதியாக பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
உடலை தோளில் தூக்கியபடி வெளியேற முயன்ற தந்தை
ஆனால், குழந்தையின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்த அந்தத் தந்தை விரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால், தனது மகனின் உடலை தோளில் தூக்கியபடி அழுதவாறு மருத்துவமனையை விட்டு வெளியேற முயன்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவே தற்போது வைரல் வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
மருத்துவமனை நிர்வாகம் அளித்த விளக்கம்
வீடியோ பரவியதைத் தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகமும் போலீசாரும் அந்த நபரிடம் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை சமாதானப்படுத்திய பின்னர், சட்டப்பூர்வ நடைமுறைகள் முடிக்கப்பட்டதாகவும், அதன் பிறகு மருத்துவமனையின் அமரர் ஊர்தி மூலம் சிறுவனின் உடல் அவரது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
முழு பின்னணி தெரியாமல் வீடியோவின் ஒரு பகுதி மட்டும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதால் பல்வேறு கருத்துகள் எழுந்தன. தற்போது மருத்துவமனை நிர்வாகத்தின் விளக்கம் வெளியாகியுள்ள நிலையில், ஒடிசா மருத்துவமனை தொடர்பான இந்த விவகாரம் மீண்டும் விவாதத்திற்கு வந்துள்ளது.