கிடுகிடுவென உயரும் சர்க்கரை விலை.. E20 பெட்ரோலால் தான் சர்க்கரை விலை உயர்ந்ததா? மத்திய அரசு விளக்கம்..!
E20 பெட்ரோல் பயன்பாடு அதிகரித்ததால் கரும்பு எத்தனால் தயாரிப்புக்கு திருப்பிவிடப்பட்டு, சர்க்கரை விலை உயர்ந்ததாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பரவி வருகின்றன. ஆனால், சர்க்கரை விலை உயர்வுக்கு எத்தனால் உற்பத்தி காரணமல்ல என்றும், குறைந்த சர்க்கரை உற்பத்திதான் முக்கிய காரணம் என்றும் மத்திய அரசு தற்போது விளக்கம் அளித்துள்ளது.
E20-க்கும் சர்க்கரை விலைக்கும் என்ன தொடர்பு? :
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதே E20 திட்டமாகும். இதற்காக கரும்பில் இருந்து பெறப்படும் மூலப்பொருட்களும் எத்தனால் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், சர்க்கரை உற்பத்திக்கான கரும்பு குறைந்து, சந்தையில் சர்க்கரை தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்ததாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. நடப்பு ஆண்டில் சுமார் 30 லட்சம் டன் சர்க்கரை எத்தனால் உற்பத்திக்கு திருப்பிவிடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசு சொல்வது என்ன? :
இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு ஏற்கவில்லை. தற்போதைய சர்க்கரை விலை உயர்வுக்கு எத்தனால் உற்பத்திக்காக சர்க்கரை அல்லது கரும்பு திருப்பிவிடப்பட்டதே காரணம் என்று கூறுவது தவறு என அரசு தெரிவித்துள்ளது. எதிர்பார்த்ததைவிட குறைந்த அளவில் உள்நாட்டு சர்க்கரை உற்பத்தி குறைந்ததே விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்றும் அரசு விளக்கியுள்ளது.

வானிலை மற்றும் தேவை அதிகரிப்பு :
சர்க்கரை உற்பத்தி குறைவதற்கு சர்க்கரை கரும்பு பயிரிடப்படும் பகுதிகளில் ஏற்பட்ட வானிலை பாதிப்புகளும் தாக்கம் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பண்டிகை காலத்தை முன்னிட்டு சர்க்கரைக்கான தேவை அதிகரித்திருப்பதும், உலகளவில் சர்க்கரை விநியோகம் இறுக்கமாக இருப்பதும் விலை உயர்வுக்கு பங்களித்துள்ளதாக அரசு கூறியுள்ளது. பதுக்கல் மற்றும் யூகத்தின் அடைப்படையில் செய்யப்படும் வணிகமும் சந்தை நிலவரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்டோபர் வரை இருப்பு :
சர்க்கரை விலை உயர்வு குறித்து கவலை எழுந்துள்ள நிலையில், அக்டோபர் மாதம் வரை தேவையை சமாளிக்கும் அளவுக்கு சர்க்கரை இருப்பு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. விலையை கட்டுப்படுத்த அரசு ஏற்கனவே சர்க்கரை இருப்பு தொடர்பான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதுடன், உள்நாட்டு சந்தையில் விநியோகத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
E20 விவகாரத்தில் உண்மை என்ன? :
E20 காரணமாக சர்க்கரை விலை உயர்ந்ததாக சமூக வலைதளங்களில் கூறப்பட்டாலும், அதுவே தற்போதைய விலை உயர்வுக்கான காரணம் என்று மத்திய அரசு மறுக்கிறது. அதேசமயம், எத்தனால் உற்பத்திக்காக கரும்பு பயன்படுத்தப்படுவது குறித்து விவாதம் தொடர்ந்து இருப்பதும், சர்க்கரை உற்பத்தி குறைந்திருப்பதும் மறுக்க முடியாத பின்னணியாக உள்ளது. எனவே, சர்க்கரை விலை உயர்வை E20 என்ற ஒரே காரணத்துடன் இணைக்காமல், உற்பத்தி, வானிலை, தேவை மற்றும் சந்தை நிலவரம் ஆகியவற்றையும் சேர்த்து பார்க்க வேண்டும்.