புதிய 20 ரூபாய் நோட்டு வெளியீடு! பழைய 20 ரூபாய் நோட்டு செல்லுமா? செல்லாதா? ஆர்பிஐ அறிவிப்பு!



new-20-rupees-note-announcement-rbi

புதிய 20 ரூபாய் நோட்டுகள் வெளியீடு – ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு!

இந்திய ரிசர்வ் வங்கி புதிய 20 ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய நோட்டுகள் தற்போதுள்ள 20 ரூபாய் நோட்டுகள் போலவே இருக்கும் எனவும், வடிவமைப்பு, வண்ணம் மற்றும் அளவில் எந்தவிதமான மாற்றமும் இருக்காது எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்த நோட்டுகளின் முக்கியமான வித்தியாசம் – அதில் இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ராவின் கையொப்பம் இடம்பெற்றிருக்கும் என்பதுதான். சக்திகாந்த தாசு பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, 2024 டிசம்பரில் சஞ்சய் மல்ஹோத்ரா புதிய ஆளுநராக பொறுப்பேற்றார்.

பண நோட்டுகளில் ஆளுநர் கையொப்பம் மாற்றம் வருவது ரிசர்வ் வங்கியின் வழக்கமான நடைமுறை. இது நாணயத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் ஒரு செயல் என்றும், பழைய 20 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் ஒவ்வொரு பணத்தாளும், அது புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படாத வரையில் இந்தியாவில் பணமாக செல்லுபடியாகும் என்பது மக்களுக்கு உறுதியளிக்கப்படும் செய்தியாகும்.