அதிபயங்கர அந்தமான் பழங்குடியினரை சந்தித்த முதல் இந்திய பெண்! 25 வருடத்திற்கு முன்பு நடந்த சுவாரசிய சம்பவங்கள்
அதிபயங்கர அந்தமான் பழங்குடியினரை சந்தித்த முதல் இந்திய பெண்! 25 வருடத்திற்கு முன்பு நடந்த சுவாரசிய சம்பவங்கள்
கடந்த சில நாட்களுக்கு பின்பு அமெரிக்காவை சேர்ந்த ஜான் ஆலன் சாவ் (26) என்ற கிறிஸ்துவ மத போதகர் சென்டினல் தீவில் வசிக்கும் ஆதிவாசிகளை கிறிஸ்துவ மதத்துக்கு மாறுமாறு பிரசாரம் செய்ய சென்றார். அங்கு வாழும் ஆதிவாசிகளால் கொடூரமாக அம்புகள் எய்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்டினல் ஆதிவாசிகள் வங்க கடல் அருகே உள்ள அந்தமான் தீவில் வடக்கு சென்டினல் தீவில் வசித்து வரும் ஆபத்தான ஆதிவாசிகளாவர்.18-ஆவது நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது 8000 பேர் வசித்து வந்தனர். ஆனால் தற்போதோ 150 முதல் 50 பேர் வரை மட்டுமே வசித்து வருகின்றனர்.
இந்த பகுதிக்கு செல்ல இந்திய அரசும் யாரையும் அனுமதிப்பதில்லை. ஏனெனில் ஆதிவாசிகள் தடுப்பு ஊசிகளை போட்டுக் கொள்ளாமலேயே வாழ்ந்து வருவதால் அவர்களிடம் இருந்து எளிதில் நோய் தொற்றும் அபாயம் உள்ளது. அந்தமானில் வசித்து வரும் ஆதிவாசிகளை காட்டிலும் சென்டினல் தீவு ஆதிவாசிகள் வெளியாட்களை எதிரிகளாகவே பார்க்கின்றனர். இந்த நிலையில் ஏற்கனவே இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் சென்டினல் தீவுக்கு சென்று வந்துள்ளது தெரிய வந்துள்ளது.
கடந்த 1991-ம் ஆண்டு ஜனவரி 4-ம் தேதி, ஒரு இளம் இந்திய பெண் மானுடவியலாளர் மதுமாலா சட்டோபத்யாய் என்பவர், அந்தமான் சென்டினலின் தீவில் தரையிறங்கி சென்டினீஸ் பழங்குடியினர் ஒருவரிடம் தான் கொண்டு வந்த தேங்காயை ஒப்படைக்க பவளப்பாறைகளுக்குள் இறங்கிய தகவல் வெளியாகி உள்ளது.
உயிருக்கு உத்தரவாதமில்லாத இந்த செயலில் ஈடுபட்ட அந்த இளம்பெண் பெயர் மதுமாலா சட்டோபத்யாய். இவர் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் பழங்குடியினரைப் பற்றி பயின்று, இந்தியாவின் ஆன்ட்ரோபாலஜிக்கல் சர்வேயின் மனிதவியல் ஆராய்ச்சியாளராக பணியாற்றியவர்.
சுமார் 60,000 ஆண்டுகளுக்கு மேலாக தனிமைப்படுத்தப்பட்ட பழங்குடியினரை தொடர்பு கொள்ள 1880-ம் ஆண்டில், மாரிஸ் போர்ட்மேன், என்னும் பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர் முதல் முயற்சியில் ஈடுபட்டார். பின்னர் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, 1970 களின் ஆரம்பத்தில் இந்தியாவின் மானுடவியல் ஆய்வு மற்றும் நேஷனல் ஜியோகிராபிக் மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் பழங்குடியினரின் அம்புகள் தாக்குதல்கள் காரணமாக அவர்களின் முயற்சி தோல்வி அடைந்தது.
இந்த நிலையில்தான் மானுடவியல் ஆராய்ச்சியாளர் மதுமாலா சட்டோபத்யாய் சென்டினல் தீவுக்கு சென்றுள்ளார். கடந்த 1991 ம் ஆண்டு ஜனவரி 4-ந்தேதி எம்.வி. தார்முக்லி என்ற கப்பல் மூலம் தனிமைப்படுத்தப்பட்ட பழங்குடி மக்கள் வாழும் பகுதியான வடக்கு சென்ட்டினெல் தீவின் தென்கிழக்கு பகுதிக்கு ஒரு குழுவினர் சென்றனர். மதுமாலாவும் அந்த குழுவில் சென்றார். அந்த குழுவில் இடம்பெற்றிருந்த ஒரே பெண், மானுடவியல் ஆராய்ச்சியாளர் மதுமாலா சட்டோபத்யாய் தான்.
இவர் அந்த பகுதிக்கு சென்ற முதல் நாளில், அங்குள்ள பழங்குடியினருக்கு தேங்காய் போன்ற ஒருசில பொருட்களை அன்பளிப்பாக அளித்தார். சில பழங்குடி ஆண்கள் அதை பெற்றுக் கொண்டனர். அதைத்தொடர்ந்து 2வது நாள் பழங்குடியினர் போலவே பவளப்பறைக்குள் இறங்கி சென்ற மதுமாலாவிடமிருந்து நேரடியாகவே ஒரு பழங்குடி மனிதன் தேங்காய் பெற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து பழங்குடி மக்களை அணுகுவதில் தாம் வெற்றி பெற்றதாக நினைத்த மதுமாலா மற்றொருவரால் தான் குறிவைக்கப்படுவதை அறியவில்லை.
இந்த நிலையில், மற்றொரு பழங்குடியினர் அவர்மீது அம்பை எய்ய, அதிர்ஷ்டவமாக, அந்த அம்பு மற்றொரு பெண் பழங்குடியால் தடுக்கப்பட்டது. இதன் காரணமாக மதுபாலா அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். அதைத்தொடர்ந்து அந்த குழுவினர் அங்கிருந்து உடனடியாக கிளம்பினர்.
இதையடுத்து, 1991 பிப்ரவரி 21-ம் தேதி மதுமாலா மறுபடியும் அந்த தீவுக்குள் செல்கிறார். தற்போது அவருக்கு சற்று தைரியம் ஏற்பட்டுள்ளது. அதன்கரணமாக ஏராளமான பரிசு பொருட்களுடன் சென்ற இவரது படகில் ஏறிய சென்டினலீஸ், அவரை உற்சாகமாக வரவேற்றுள்ளனர். அதைத்தொடர்ந்து அங்குள்ள மக்களிடம் உரையாடியவர், அங்குள்ள பழங்குடியின குழந்தைகளை தூக்கியும் கொஞ்சினார். இந்த முறை அவர் எந்தவித தாக்குதலுக்கும் உள்ளாகவில்லை என்பது வியப்பை ஏற்படுத்தியது.
சமீபத்தில் தனியார் இணையதளம் ஒன்றில் பேசிய மதுமாலா, “என்னுடைய ஆறு ஆண்டுகால பழங்குடியினருடனான ஆராய்ச்சி பணியில், அம்மக்கள் ஒருபோதும் என்னுடன் தவறாக நடந்ததில்லை. பழங்குடியினர் தங்கள் தொழில்நுட்ப சாதனைகளில் பழமையானவர்களாக இருக்கலாம், ஆனால் ஒரு நல்ல சமூகமாக அவர்கள் நம்மை விட முன்னேறி இருக்கிறார்கள். தனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டால், மறுபடியும் அந்தமான் தீவுகளுக்கு சென்று அவர்களை பார்க்க தயாராக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.