பள்ளி வளாகத்தில் சிறுமிக்கு கத்திக்குத்து.. 21 வயது இளைஞன் வெறிச்செயல்.. பரபரப்பு சம்பவம்.!
பள்ளி வளாகத்தில் சிறுமிக்கு கத்திக்குத்து.. 21 வயது இளைஞன் வெறிச்செயல்.. பரபரப்பு சம்பவம்.!
பத்தாம் வகுப்பு பயின்று வரும் 15 வயது சிறுமி, 21 வயது இளைஞனால் பள்ளி வளாகத்தில் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே, வாட்கண் ஷெரி பகுதியில் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இதே பள்ளியில், 15 வயது சிறுமி பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார்.
இந்நிலையில், இன்று சிறுமியை காணுவதற்கு 21 வயதுடைய இளைஞன் வந்திருந்த நிலையில், இருவரும் பேசிக்கொண்டு இருக்கும்போதே இளைஞன் சிறுமியை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளான். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி அலறியவாறு, இரத்த வெள்ளத்தில் மயங்கி இருக்கிறார்.
சிறுமியை கத்தியால் குத்திய இளைஞன் சம்பவ இடத்திலேயே விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்து இருக்கிறான். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவ - மாணவியர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், மருத்துவமனைக்கு சென்று இருவரும் சிகிச்சை பெற்று வருவதை உறுதி செய்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை சிறுமி கொலை முயற்சிக்கான காரணம் கண்டறியப்படவில்லை.