இந்து முறைப்படி மசூதியில் நடந்த திருமணம்..! இந்தியாவைத் திரும்பிப் பார்க்கவைத்த கேரளா சம்பவம்..!
இந்து முறைப்படி மசூதியில் நடந்த திருமணம்..! இந்தியாவைத் திரும்பிப் பார்க்கவைத்த கேரளா சம்பவம்..!
கேரளாவில் உள்ள மசூதி ஒன்றில் இந்து முறைப்படி நடைபெற்ற திருமணம் ஓன்று பெரும் வரவேற்பையும், வாழ்த்துக்களையும் பெற்றுவருகிறது. கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஞ்சு. தந்தையை இழந்த இவருக்கு 2 சகோதரிகள் உள்ளனர். அஞ்சுவின் குடும்பம் பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் ஒரு குடும்பம்.
இந்நிலையில் தனது மகள் அஞ்சுவின் திருமணத்திற்கு உதவி செய்யவேண்டும் என அவரது தாய் பிந்து செருவல்லி பகுதியில் உள்ள மசூதி நிர்வாகத்தை நாடியுள்ளார். உதவி கேட்பவர்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிந்தும் மசூதி நிர்வாகம் உதவி செய்ய முன்வந்ததோடு திருமணத்தையும் மசூதி வளாகத்திலையே நடத்திக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.
இதனை அடுத்து செருவல்லி மசூதி வளாகம் திருமண மண்டபமாக மாறியது. தென்னை மரங்கள் கட்டி, வாழை மரங்கள் நடப்பட்டு பந்தல் போடப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12.15 மணிக்கு இந்து முறைப்படி குத்துவிளக்கு ஏற்றி மந்திரங்கள் ஓதி, இருமத மக்களும் வாழ்த்த, அஞ்சுவின் கழுத்தில் தாலி கட்டினார் சரத்.
மசூதி நிர்வாகம் சார்பாக மணமக்களுக்கு 10 சவரன் நகையும், 2 லட்சம் பணமும் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் 1000 பேருக்கு உணவும் பரிமாறப்பட்டுள்ளது. இந்த திருமணம் பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் பெற்று வருகிறது.