அதிகாலையில் கோவா கடற்கரையில் வெளிநாட்டு பெண் பலாத்காரம்! போலீசார் வழக்குப்பதிவு
அதிகாலையில் கோவா கடற்கரையில் வெளிநாட்டு பெண் பலாத்காரம்! போலீசார் வழக்குப்பதிவு
கோவா பலோலம் கடற்கரையில் கடந்த வியாழக்கிழமை அதிகாலை தனியாக சென்று கொண்டிருந்த 42 வயது இங்கிலாந்து சுற்றுலாப்பயணியை அடையாளம் தெரியாத ஒரு நபர் வலுக்கட்டாயமாக வற்புறுத்தி பலாத்காரம் செய்துள்ளார் அந்த பெண்ணின் புகாரின் பேரில் போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.
கோவா கடற்கரையின் அழகை ரசிப்பதற்கு பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து தங்கி ஓய்வெடுப்பது வழக்கமான ஒன்று. போர்ச்சுகீசியர்களின் கட்டிட அழகும், இயற்கை கடற்கரை அழகும் சுற்றுலா பயணிகளை சுண்டி இழுக்கும். குறிப்பாக கிறிஸ்துமஸ், புத்தாண்டு சமயங்களில் வெளிநாடுகளிலிருந்து பல சுற்றுலா பயணிகள் கோவாவிற்கு வருகைதந்து மார்ச் மாதம் வரை தங்கியிருப்பார்.
இவ்வாறு ஓய்வு எடுப்பதற்காக இங்கிலாந்து நாட்டிலிருந்து அடிக்கடி கோவாவிற்கு வந்து செல்பவர் அந்த 42 வயது பெண்மணி. அதே போல் இந்த ஆண்டும் ஓய்வு எடுப்பதற்காக சில நாட்களுக்கு முன்பு வந்த அவர் தெற்கு கோவா பகுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். கடந்த வியாழக்கிழமை அதிகாலையில் கனகோனா ரயில்வே நிலையத்திலிருந்து பலோலம் கடற்கரை அருகே இருந்த தனது அறைக்கு தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கே வந்த அடையாளம் தெரியாத ஒரு நபர் தனியாக வந்த பெண்ணை வழிமறித்து வற்புறுத்தி பலாத்காரம் செய்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அந்த இங்கிலாந்து பெண்மணி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற கோவா குற்றவியல் துறை போலீசார் அந்த அடையாளம் தெரியாத நபரை பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பெண் கொடுத்த அடையாளத்தின் படி, ஏற்கனவே குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களின் பட்டியலைத் தயாரித்து அவர்களை விசாரிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.