4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! பழி தீர்த்த இந்தியப்படையினர்!



Army attacked terrorist

காஷ்மீரில் கடந்த சில தினங்களாக பாதுகாப்பு படையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் காஷ்மீரில் கடந்த 2 தினங்களில் ராணுவ கர்னல் உள்பட 8 வீரர்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனையடுத்து இந்திய பாதுகாப்புப் படையினர், தீவிரவாதிகளை பிடிப்பதற்காக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாத இயக்க முக்கிய தலைவர் ஒருவர் பதுங்கி இருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதிக்கு விரைந்து சென்ற இந்திய படையினர் அதிரடி தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

அங்கு பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத தளபதியும் மற்றொரு பயங்கரவாதியும் சுட்டு கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

army

இந்த இயக்கத்தின் தளபதியாக செயல்பட்டு வந்த புர்ஹான் வானி கடந்த 2016-ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர், ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்துக்கு தளபதியாக ரியாஸ் நைக்கூ பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார். பல ஆண்டுகளாக பிடிபடாமல் சுற்றித்திரிந்த இவரை இந்தியப் படையினர் சுட்டு தள்ளியுள்ளனர்.

மேலும், இதே மாவட்டத்தில் ஷார்சாலி கிராமத்தில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன் மூலம், அண்மையில் குப்வாரா மாவட்டத்தில் கொல்லப்பட்ட ஐந்து பாதுகாப்பு வீரர்களின் இறப்புக்கும் பாதுகாப்புப் படையினர் பழி தீர்த்தனர்.