பாட்டு குயிலே சிறகை விரி.. மீண்டு வா!! எஸ்.பி.பி க்காக கவிஞர் வைரமுத்து உருக்கம் !
பாட்டு குயிலே சிறகை விரி.. மீண்டு வா!! எஸ்.பி.பி க்காக கவிஞர் வைரமுத்து உருக்கம் !
பிரபல பின்னணி பாடகர் எஸ். பி.பாலசுப்ரமணியனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் கடந்த 5ம் தேதி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் எஸ்.பி.பி விரைவில் குணமடைந்து மீண்டு வர வேண்டும் என பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குணமடைந்து மீண்டு வரவேண்டி கவிஞர் வைரமுத்து உருக்கமாகப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எங்கள் வாழ்வின் அன்றாடமே, எங்கள் மூளையின் ஒரு மூலையில் கூடு கட்டி பாடும் குயிலே. மீண்டு வரவேண்டும். இசையுலகை நீங்கள் ஆண்டு வரவேண்டும். என் முதல் பாடல் பாடியவன் நீ. என் கடைசி பாடலையும் நீதான் பாட வேண்டும்.
மேகங்கள் வந்து வந்து போகும். வானம் நிரந்தரம். இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் என்று மாறி மாறி நடந்த என் கலைவாழ்வில் 40 ஆண்டுகளாய் மாறாத மகா கலைஞன் நீ. இந்த உலகமே உனக்காக வேண்டி நிற்கிறது. இந்த உலகத்துக்கு இன்பம் மட்டுமே கொடுத்து பழகியவன் நீ. துன்பம் கொடுக்க மாட்டாய் என்று எனக்கு தெரியும். பாட்டு குயிலே சிறகை விரி. கூண்டை உடை. மீண்டு வா. இசை உலகை ஆண்டுவா. பாடவா என்று கூறியுள்ளார்.
மேலும் காதல் ரோஜாவே என்ற பாடலை, பாடல் ரோஜாவே மாற்றி உருக்கமாகவும் பாடியுள்ளார்.