தெலுங்கு படங்களை வெளியிட முடியாது.! வாரிசு படத்திற்கு எழுந்த சிக்கல்!! ஆதரவாக களமிறங்கிய சீமான்!!



seeman-support-to-vijay-varisu

தமிழ் சினிமாவில் டாப் ஸ்டாராக வலம் வரும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ஹீரோயினாக, விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

வாரிசு படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார். மேலும் தமன் இசையமைத்துள்ளார். வாரிசு படத்தில் இடம்பெற்றுள்ள ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் அண்மையில் வெளிவந்து பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி, பெருமளவில் ஹிட்டானது. வாரிசு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது.

ஆனால் விழாகாலங்களில் தெலுங்கில் நேரடியாக வெளியாகும் படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரும் இயக்குனருமான சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, ஏராளமான தெலுங்கு திரைப்படங்கள் தமிழகத்தில் எவ்வித தடையுமின்றி வெளியாகிக் கொண்டிருக்கிறது. 

ஆனால் தமிழ் திரைப்படங்கள் வெளியாவதற்கு தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் கெடுப்பிடி விதித்திருப்பது மிக தவறான முன்னுதாரணம். இந்த சிக்கல், விஜய் என்ற ஒரு நடிகரின் திரைப்பட வெளியீட்டுக்கு எழுந்த சிக்கல் இல்லை. ஒட்டுமொத்த தமிழ் திரைப்படங்களின் வெளியீட்டுக்கு எதிராக உருவாகியுள்ள மறைமுக நெருக்கடி.  இதனை ஒருபோதும் ஏற்கவோ, அனுமதிக்கவோ முடியாது. தமிழ்த் திரைப்படங்களின் வெளியீட்டுக்கு எதிரான இந்த முடிவை தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் தெலுங்குத் திரைப்படங்களைத் தமிழகத்தில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என வன்மையாக எச்சரிக்கிறேன்" என்று கூறியுள்ளார்