படப்பிடிப்பு தளத்தில் 40 அடி உயரத்தில் இருந்து லைட் மேன் தவறி விழுந்து உயிரிழப்பு...!
படப்பிடிப்பு தளத்தில் 40 அடி உயரத்தில் இருந்து லைட் மேன் தவறி விழுந்து உயிரிழப்பு...!
சாலிகிராமத்தை சேர்ந்த லைட் மேன் குமார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் ஸ்டுடியோவில் பணியில் ஈடுபட்டிருந்த போது 40 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கவரைப்பேட்டையில் ஏ.ஆர். பிலிம் சிட்டி என்ற ஸ்டுடியோ உள்ளது. இங்கே படப்பிடிப்புகள் அவ்வப்போது நடைபெறும். சத்யராஜ் நடிக்கும் "வெப்பன்" படத்திற்காக ஸ்டுடியோவில் செட் போடப்பட்டு வருகிறது.
சாலிகிராமத்தைச் சேர்ந்த லைட்மேன் குமார் (47) என்பவர் இதற்காக பணியாற்றி வருகிறார். இன்று காலை லைட்மேன் குமார் படபிடிப்பிற்காக 40 அடி உயரத்தில் மின் விளக்குகளை பொருத்தும் வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென கால் தடுக்கி மேலிருந்து கீழே விழுந்தார்.
உடனே அவரை சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் முன்னதாகவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இதைத் தொடர்ந்து அவரது உடல் உடற்கூராய்விற்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனையடுத்து கவரைப்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். படபிடிப்புக்கன பணியில் ஈடுபட்டிருந்த போது தவறி விழுந்து லைட்மேன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.