நிலநடுக்கத்தில் பெற்றோரை இழந்த பச்சிளம் குழந்தை; "அயா" வை தத்தெடுக்க போட்டி போடும் மக்கள்...!

நிலநடுக்கத்தில் பெற்றோரை இழந்த பச்சிளம் குழந்தை; "அயா" வை தத்தெடுக்க போட்டி போடும் மக்கள்...!



lost parents in earthquake; People competing to adopt baby "Aya"...

துருக்கி நிலநடுக்கத்தில் பெற்றோரை இழந்த பச்சிளம் குழந்தையை வளர்க்க உலகெங்கும் இருந்து ஆயிரக்கணக்கானோர் விருப்பம் தெரிவித்து  வருகின்றனர்.

பிப்ரவரி 6-ஆம் தேதி துருக்கி மற்றும் சிரியா எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. அந்த இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

தற்போதைய நிலவரப்படி சுமார் 24,000 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. என் நிலையில் உலக நாடுகள் துருக்கி, சிரியா நாட்டு மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி அரவணைத்து வருகிறது. 

இந்த நிலநடுக்கத்தின் போது இடிபாடுகளில் சிக்கிநிறைமாத கர்பிணி ஒருவர் பெண் குழந்தையை பிரசவித்து உயிரிழந்தார். தொப்புள் கொடி கூட அறுபடாமல் அந்த குழந்தை இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டது.

இந்த குழந்தையின் தந்தை, தாய், உடன் பிறந்தநான்கு பேரும் நிலநடுக்கத்தில் பலியானதால், பச்சிளம் குழந்தையை தூரத்து உறவினர் மீட்டு மருத்துமனையில் அனுமதித்துள்ளார். அந்த குழந்தையை காப்பாற்றி சிகிச்சை வழங்கி வருகின்றனர். இந்த குழந்தைக்கு மருத்துவமனையில் அயா என்று பேர் வைத்து அனைவரும் ஆசையுடன் அழைத்து வருகின்றனர். 

அயா என்றால் அரபியில் அதிசயம் என்று பொருள். மீட்கப்பட்ட இந்த குழந்தையை பற்றிய செய்தி சமூகவலைத்தளம் மூலம் உலகமெங்கும் பரவியது. இந்நிலையில், குழந்தையை தத்தெடுத்து வளர்க்க ஆயிரக்கணக்கானோர் ஆர்வமுடன் முன் வருகின்றனர்.

குவைத்தை சேர்ந்த டீவி பிரபலம் உட்பட பலரும் குழந்தையை வளர்க்க விருப்பம் தெரிவித்தனர். இந்நிலையில், மருத்துவமனையின் மேலாளர் மருத்துவர் காலித் அட்டாயா, குழந்தையை யாருக்கும் தத்து கொடுக்க போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.