10 பேரிடம் ஆசை வார்த்தை கூறி டிமிக்கி கொடுத்த பெண்!! ஏமாற்றத்தில் ஒருவர் தற்கொலை!!

திருச்சியை சேர்ந்தவர் பூங்கொடி. இவர் மகளிர் சுய உதவி குழு தலைவியாக இருந்துள்ளார். இவரது குழுவில் அதே பகுதியை சேர்ந்த லட்சுமி என்பவர் உறுப்பினராக இருந்துள்ளார். இந்தநிலையில் பூங்கொடி, தான் தலைவியாக இருக்கும் குழுவில் லட்சுமி பெயரில், ஒரு லட்சம் ரூபாய் பணம் கடனாக பெற்றுள்ளார்.
லட்சுமிக்கு 2 மாதங்கள் அதிக வட்டி கொடுத்ததோடு, வாரம் கட்ட வேண்டிய தொகையையும் முறையாக கொடுத்து ஆசையை தூண்டியுள்ளார். இதனால் ஏமாந்து போன லட்சுமி, மேலும் 2 மகளிர் சுய உதவி குழுக்களில் உறுப்பினராக சேர்ந்து அங்கும் கடன் பெற்று பூங்கொடிக்கு பணம் கொடுத்துள்ளார்.
இந்தநிலையில் லட்சுமியிடம் 3 லட்சம் ரூபாய் வரை பெற்றுக் கொண்ட பூங்கொடி, திடீரென முறையாக பணம் செலுத்துவதை நிறுத்தியுள்ளார். ஆனால் லட்சுமிக்கு மற்ற குழுக்களில் இருந்து கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் பணத்தை திருப்பி செலுத்த இயலாமல் தவித்த லட்சுமி, தனது கணவருடன் சேர்ந்து விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
இதனையடுத்து உயிருக்கு போராடிய இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் லட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். லட்சுமியின் கணவர் பாஸ்கருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மகளிர் சுய உதவி குழு தலைவி பூங்கொடி தலைமறைவாகி உள்ளார்.
இந்தநிலையில் லட்சுமி போல 10 பேர் பெயரில் 10 லட்சம் ரூபாய் அளவிற்கு கடன் பெற்று பூங்கொடி மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பூங்கொடியை தேடி வருகின்றனர்.