செஞ்சியில் பரபரப்பு.. செஞ்சிக்கோட்டை கமலக்கன்னியம்மன் கோவில் சூறை.. மர்ம நபர்கள் வெறிச்செயல்.! 

செஞ்சியில் பரபரப்பு.. செஞ்சிக்கோட்டை கமலக்கன்னியம்மன் கோவில் சூறை.. மர்ம நபர்கள் வெறிச்செயல்.! 


viluppuram-gingee-fort-kamala-kanniyamman-temple-vanish

செஞ்சியில் உள்ள கோட்டை மீது அமைந்திருக்கும் கமலக்கன்னியம்மன் கோவில் மர்ம நபர்களால் சூறையாடப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் உலகப்புகழ்பெற்ற செஞ்சிக்கோட்டை அமைந்துள்ளது. தென்னிந்திய மற்றும் சுதந்திரப் போராட்ட வரலாறிலும், மிக முக்கிய பங்கை கொண்ட செஞ்சி கோட்டை நான்கிற்கும் மேற்பட்ட கோட்டைகளை ஒருங்கே இணைத்து அமையப்பெற்றது ஆகும். தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 

செஞ்சிக்கோட்டையின் ராஜகிரிக்கோட்டைக்கு செல்லும் நடுவழியில் 800-க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக அங்குள்ள மக்களால் வணங்கப்பட்ட கமலக்கண்ணி அம்மன் ஆலயமானது உள்ளது. செஞ்சி நகரில் உள்ள பீரங்கிமேடு தெருவில் வசித்து வரும் மக்கள் கோவில் வழிதாரர்களாக இருக்கின்றனர். செஞ்சிக்கோட்டை தற்போது தொல்லியல் துறையின் வசத்தில் இருந்தாலும், கமலக்கன்னியம்மன் கோவில் திருவிழா மற்றும் பராமரிப்பு போன்றவை அவர்களின் பராமரிப்பில் உள்ளது. 

Viluppuram

இக்கோவிலில் திருவிழா நடைபெறும் காலங்களில் 10 நாட்கள் கோட்டையை சுற்றிப்பார்க்க மக்களுக்கு இலவச அனுமதியும் வழங்கப்படும். திருவிழா காலங்களில் செஞ்சிக்கோட்டையின் கீழ் பகுதியில் இருந்தே அம்மன் புறப்பட்டு ஊருக்கு சென்றுவரும். 

இந்த நிலையில், செஞ்சிக்கோட்டை மலைமீது அமைந்துள்ள கமலக்கன்னியம்மன் ஆலயம் மர்ம நபர்களால் சூறையாடப்பட்டுள்ளது. கோவிலில் இருந்த அம்மன் சிலைகள் சேதப்படுத்தப்பட்டு, அம்மனுக்கு எதிரில் வைக்கப்பட்டு இருந்த ஈட்டி, சூலாயுதம் போன்றவை சேதப்படுத்தப்பட்டு உள்ளன. 

கோவிலுக்கு நேற்று பூஜை செய்ய சென்ற பூசாரி கோவில் சூறையாடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளூர் மக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து வந்த இளைஞர்கள் அனைத்தையும் காணொளியாக பதிவு செய்து வைத்துக்கொண்டனர். 

மேலும், இதுகுறித்து செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல் துறையினர் மர்ம நபர்களுக்கு வலைவீசியுள்ளனர். மன்னர்களின் காலத்தில் இருந்து மிக முக்கிய திருவிழாவாக செஞ்சி கமலக்கன்னியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில், இந்த செயல் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.