என்ன இப்படி பேசிட்டாரே.... பேரவையில் விஜய்யை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய உதயநிதி! மக்கள் பேசுறாங்க பேசுறாங்கன்னு என்ன என்ன சொல்லிட்டாரு பாருங்க! ஆவேசமான திமுக பேச்சு!!!
தமிழகச் சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சித்தார். தேர்தல் முடிவுகள் முதல் ஆட்சியின் செயல்பாடு வரை பல விஷயங்களை சுட்டிக்காட்டி அவர் பேசியது அவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பேரவையில் உரையாற்றிய உதயநிதி, “நடந்து முடிந்த தேர்தலில் பெரும்பான்மையான மக்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை. மொத்தம் பதிவான 4.93 கோடி வாக்குகளில், ஆளுங்கட்சி பெற்றது 1.72 கோடி வாக்குகள் மட்டுமே. மீதமுள்ள மக்கள் உங்களுக்கு எதிராகவே வாக்களித்துள்ளனர்” என்று கூறினார்.
வாக்கு சதவீதத்தை முன்வைத்து தாக்குதல்
தொடர்ந்து பேசிய அவர், “ஏறத்தாழ 65 சதவீத மக்களால் நிராகரிக்கப்பட்ட இந்த ஆட்சியின் மீது, எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமல்ல, உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கே நம்பிக்கை குறைந்து வருகிறது” என விமர்சித்தார்.
இதையடுத்து ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, அவையில் சில நேரம் கூச்சல் நிலவியது. அதன்பின் சபாநாயகர் தலையிட்டு உறுப்பினர்களை அமைதிப்படுத்தினார்.
‘புஷ்பா’ பாணி ஆட்சி என கிண்டல்
ஆட்சியின் அரசியல் நகர்வுகளை சுட்டிக்காட்டிய உதயநிதி, “அதிமுக பிளவுபட்ட பிறகு ஒரு பிரிவினர் உங்களுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். அதற்குப் பிறகுதான் பெரிய திருப்பம் நடந்தது. அந்தப் பிரிவில் ஒருவரது வீட்டிற்கு புதிய சோஃபா செல்கிறது; பின்னாலேயே புதிய முதலமைச்சரும் செல்கிறார்” என்று மறைமுகமாக தாக்கினார்.
மேலும், “மொத்தத்தில் சினிமா பாணியில், குறிப்பாக புஷ்பா பட பாணியில் இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது” எனக் கூறியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேசை தட்டினர்.
‘Reels ஆட்சி வேண்டாம்’
சமூக வலைதள அரசியலையும் உதயநிதி விமர்சித்தார். “இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் ஆட்சி நடத்தாமல், ரியல் ஆட்சி நடத்துங்கள். அதைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்” என்றார்.
அதோடு, “நீங்கள் சேஞ்ச் என்று சொன்னீர்கள். ஆனால் அதற்கு பின்னால் எக்ஸ்சேஞ்ச் இருப்பதாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் உதயநிதி ஸ்டாலின் பேச்சில் கூவத்தூர் சம்பவமும் ஒப்பிடப்பட்டதால், அவையில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து வீடியோக்கள் வெளியாகி வரும் சூழலில், அதையே நேரடியாக சுட்டிக்காட்டி எதிர்க்கட்சித் தலைவர் பேசியது தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.