காதலிக்க மறுத்த மாணவியை ஹெல்மட்டால் தாக்கிய இளைஞர்கள்.. தகராறு செய்தவர்களை தட்டி தூக்கிய போலீசார்.!

18 வயதுடைய பள்ளி மாணவியை காதலிக்குமாறு வற்புறுத்தி, ஹெல்மட்டால் தாக்கிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் உள்ள செம்மஞ்சேரி பகுதியில் 18 வயதுடைய பள்ளி மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் சின்னமலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில், வெட்டுவாங்கேணி பகுதியை சேர்ந்த முகேஷ் என்ற வாலிபர் கடந்த 3 ஆண்டுகளாக மாணவியை காதலித்து வந்துள்ளார். இருவருக்குள்ளும் தற்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததாக தெரியவருகிறது.
இதனால் கடந்த சில நாட்களாக மாணவி அவரிடம் பேசுவதை தவிர்த்துள்ளார். இதனைத்தொடர்ந்து கோபமுற்ற முகேஷ் அவரது நண்பருடன் வேளச்சேரி செக்போஸ்ட் அருகாமையில் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மாணவியை கட்டாயப்படுத்தி பேச கூறியுள்ளார். மேலும், தன்னை காதலிக்குமாறும் வற்புறுத்தியுள்ளார்.
இருப்பினும் மாணவி இதற்கு எவ்வித பதிலும் கூறாததால், ஆவேசமடைந்த முகேஷ் மாணவியை ஹெல்மெட்டால் தாக்கிவிட்டு அவரது நண்பருடன் தப்பிச்சென்று உள்ளார். இதனையடுத்து மாணவியின் பள்ளிக்கும் சென்று தகராறு நடத்தியுள்ளார். மாணவி எங்கு சென்றாலும் அவரை பின்தொடர்ந்து வந்து தகராறு செய்த காரணத்தால், மாணவி இதுகுறித்து கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மாணவி அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், வெட்டுவாங்கேணியை சேர்ந்த முகேஷ் மற்றும் சைதாப்பேட்டையை சேர்ந்த சையது மசூத் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்ற உத்தரவுடன் சிறையில் அடைத்தனர்.